திருவாரூர் மாவட்டத்தில் 6 கோடி மதிப்புள்ள ஐந்தரை கிலோ எடை கொண்ட திமிங்கல எச்சத்தை வனத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
திருவாரூரில் திமிங்கிலம் எச்சம் கடத்தப்படுவதாக திருச்சி தலைமை வன பாதுகாவலர் சதீஷ் என்பவருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த ரகசிய தகவலின் அடிப்படையில் திருவாரூர் மாவட்ட வனத்துறை அலுவலர் அறிவொளி தலைமையில் 5 பேர் கொண்ட குழுவினர் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
கொரடாச்சேரி சாலையில் அம்மையப்பன் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது நான்கு நபர்கள் மூன்று இரு சக்கர வாகனங்களில் வந்துள்ளார்கள். வந்தவர்கள் வனத்துறை அதிகாரிகளைக் கண்டதும் இருசக்கர வாகனங்களை விட்டு தப்பி ஓட முயற்சித்துள்ளனர். அவர்களில் சுரேஷ், வேல்முருகன், பாலசுப்பிரமணியன் ஆகிய மூவரையும் வனத்துறை அதிகாரிகள் விரட்டி பிடித்தனர். அதில் பிரதீப் ராஜ்குமார் என்பவர் மட்டும் தப்பியோடி விட்டார்.
இவர்களின் இருசக்கர வாகனங்களை ஆய்வு செய்தபோது அதில் அவர்கள் கடத்தி வந்த ஐந்தரை கிலோ எடையுள்ள ஆறு கோடி மதிப்புள்ள தீமிங்கில எச்சம் இருந்தது கண்டறியப்பட்டது.
பிடிபட்ட மூவர் மீதும் வழக்கு பதிவு செய்து, திருவாரூர் மாவட்ட வனத்துறை அலுவலகத்தில் வைத்து மாவட்ட வனத்துறை அலுவலர் அறிவொளி விசாரணை மேற்கொண்டார்.
இதுகுறித்து மாவட்ட வனத்துறை அலுவலர், “தப்பி ஓடிய பிரதீப் ராஜ்குமார் என்பவன் முக்கிய குற்றவாளி எனவும், இந்த திமிங்கிலம் எச்சம் எங்கிருந்து கொண்டுவரப்பட்டது, யாரிடம் விற்க முயற்சித்தார்கள் என்பது குறித்த விவரங்கள் பிரதீப் ராஜ்குமாரை கைது செய்து விசாரித்தால் தெரியவரும்” எனவும் தெரிவித்தார்.
பிரதீப் ராஜ்குமாரை வனத்துறையினர் தீவிரமாக தேடி வருகிறார்கள். மேலும் கைது செய்யப்பட்டு வழக்கு பதியப்பட்ட மூன்று நபரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர்