பழனி கோவிலுக்கு வருகை தந்த தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தங்கத்தேர் இழுத்தும், ராஜ அலங்காரத்தில் முருகனை தரிசனம் செய்தார்.
திண்டுக்கல் மாவட்டம், பழனி கோவிலுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வருகை தந்தார். கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட ஆளுநர் இன்று மாலை பழனி கோவிலுக்கு சாமிதரிசனம் செய்ய குடும்பத்துடன் வருகை தந்தார்.
கோவையில் இருந்து கார் மூலம் பழனிக்கு வருகைதந்த ஆளுநர் ரவியை மாவட்ட ஆட்சியர் பூங்கொடி, டிஐஜி அபினவ்குமார், திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
தொடர்ந்து மின்இழுவை ரயில் மூலம் மலைக்கோவிலுக்கு மேலே சென்ற ஆளுநருக்கு பழனி திருக்கோவில் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. தொடர்ந்து ஆளுநரை அதிகாரிகள் வரவேற்று கோவிலுக்கு அழைத்து சென்றனர்.
பழனி கோவிலில் நடைபெற்ற சாயரட்சை பூஜையில் கலந்துகொண்ட ஆளுநர் ஆர்.என்.ரவி, ராஜ அலங்காரத்தில் காட்சி அளித்த பழனியாண்டவரை தரிசனம் செய்தார். தொடர்ந்து போகர் ஜீவசமாதியில் வழிபாடு நடத்திய ஆளுநர் தங்கத்தேர் இழுத்து வழிபாடு செய்தார்.
சாமி தரிசனம் செய்துவிட்டு மீண்டும் கோவைக்கு திரும்பினார்.ஆளுநரின் வருகையை முன்னிட்டு ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.