ஆசியாவிலேயே முதல் ஈரடுக்கு மேம்பாலம் நெல்லை சந்திப்பு பகுதியை இணைக்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது. கடந்த 3ம் தேதி கொக்கரக்குளம் பகுதியை சேர்ந்த வேல்முருகன் என்பவர் இருசக்கர வாகனத்தில் பாலம் அருகே வந்து கொண்டிருந்தார்.
அப்போது பாலத்தின் பக்கவாட்டு சுவரில் இருந்த பெரிய கல் ஒன்று திடீரென அவர் மீது விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் வேல்முருகன் படுகாயம் அடைந்து நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதன் பின்னர் உறவினர்கள் உடனே அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் இன்று வேல்முருகன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்நிலையில் வேல்முருகனின் மகன் மற்றும் உறவினர்கள் நெல்லை சந்திப்பு காவல் நிலையத்தில் இன்று புகார் ஒன்று அளித்தனர். அதில் இந்த விபத்து தொடர்பாக ஒப்பந்ததாரர் மற்றும் அதிகாரிகள் மீது ‘அலட்சியத்தால் மரணத்தை உண்டாக்குதல்’ போன்ற பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்தால் மட்டுமே உடலை வாங்கப் போவதாக தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் தனியார் மருத்துவமனையில் இருந்த உடலை நெல்லை சந்திப்பு போலீசார் கைப்பற்றி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். கடந்த மார்ச் மாதம் முதல் ரூ.2 கோடியே 83 லட்சம் மதிப்பீட்டில் ஈரடுக்கு மேம்பாலம் பராமரிப்பு பணி நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.