தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் கோடை வெயில் மக்களைக் கடுமையாக வாட்டி வதைத்து வருகிறது.இதனால் முதியவர்கள், குழந்தைகள் வெளியில் செல்ல முடியாத நிலை உள்ளது.
இந்த நிலையில், கோடை வெயிலைத் தணிக்கும் வகையில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாகத் தமிழ்நாட்டின் பல இடங்களில் மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக ஈரோட்டில் 37.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், சென்னையில் 36.9 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த மூன்று நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி ராமநாதபுரம், தூத்துக்குடி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், கடலூர், விழுப்புரம் மற்றும் திருச்சிராப்பள்ளி ஆகிய 9 இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளது.
தென் இந்தியப் பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்குத் திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதனால் தமிழ்நாட்டில் மேலும் சில தினங்களுக்கு மழை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வரும் 3ம் தேதி வரை 3 நாட்களுக்குக் கனமழை தொடரும் எனவும் 4 மற்றும் 5ம் தேதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. புதுச்சேரியில் மே 5ம் தேதி வரை 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது எனவும் சென்னையில் 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை ( மே1) முதல் சென்னையில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் குறைந்து குளிர்ச்சியான நிலை நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.