அதிவேகமாக பைக்குகளை ஓட்டி, இளைஞர்கள், சிறுவர்களை கவர்ந்தும், அவர்களிடத்திலே மோகத்தை ஏற்படுத்தி வரும் பிரபல யூட்யூபர் டிடிஎஃப் வாசன் சாலை விதிகளை மீறிய புகாரின் பேரில் போலீசாரால் பலமுறை நடவடிக்கைக்கு ஆளாகியுள்ளார். இவர் மஞ்சள் வீரன் என்கிற படத்தில் தற்போது நடித்தும் வருகிறார்.
இந்நிலையில் டிடிஎஃப் வாசன் சென்னையிலிருந்து-மகாராஷ்டிராவிற்கு தனது நண்பரான அஜித் என்பவர் உடன் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக நேற்று சென்ற போது ஒருவரைக் ஒருவர் முந்தி பைக் ரேஸில் ஈடுபட்டதும், அதிவேகமாக வாகனத்தினை இயக்கி ஸ்டண்ட் என்று சொல்லப்படக்கூடிய வீலிங் சாகசத்தில் ஈடுபட்டிருக்கிறார்.
மேலும் வரக்கூடிய வழிகளில் தனது ஆதரவாளர்கள் என்று சொல்லப்படக்கூடிய FOLLOWERS களை வரவழைக்கும் தொடர்ந்து தான் வரும் இடங்கள் குறித்து சமூகவளைதளங்களிலே பதிவிட்டிருக்கிறார். அதையடுத்து ஆங்காங்கே இளைஞர்கள் சிலர் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் குழுமியிருக்கின்றனர். அப்போது அவர்களை மகிழ்ச்சிபடுத்தும் நோக்கில் TTF வாசன் வீலிங் சாகசத்தில் ஈடுபட்டிருக்கிறார்.
அதற்கிடையில் காஞ்சிபுரத்தை அடுத்த தாமல் பகுதியில் சென்று கொண்டிருந்த போது வீலிங் சாகசத்தில் ஈடுபட்ட TTF வாசன் பைக்கின் பின்புறமானது, சாலையில் தேய்ந்து நிலைதடுமாறி தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் TTF வாசனுக்கு படுகாயம் ஏற்பட்டு காரப்பேட்டை அருகிலுள்ள மீனாட்சி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பெற்ற நிலையில் கையில் மாவுகட்டு போடப்பட்டுள்ளது அதை தொடர்ந்து அவரது நண்பர்கள் அவரை சென்னைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பாக TTF வாசன் மீது 279 IPC மனித உயிருக்கு ஆபத்து உண்டாகும் வகையில் அல்லது காயம் அல்லது தீங்கு ஏற்படும் விதத்தில், ஒரு வாகனத்தை அஜாக்கிரதையாக ஓட்டுவது, 338 IPC பிறருடைய பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும் முறையில் அசட்டுத் துணிச்சலுடன் வாகனத்தை இயக்குவது ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் பாலுச்செட்டி சத்திரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.