லால்குடி அருகே பாடம் சொல்லி தரும் பேராசிரியரே கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்து குமுளூர் பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் இருக்கும் அரசு கலை அறிவியல் கல்லூரியில் 800-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.இந்த கல்லூரியில் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த வினோத்குமார், வணிகவியல் பேராசிரியராக கடந்த 2 மாதங்களுக்கு முன் பணியில் சேர்ந்துள்ளார்.
இந்த நிலையில், பேராசிரியர் வினோத்குமார் வணிகவியல் துறையில் பயின்று வரும் மாணவிகளுக்கு அவருடைய செல்போன் மூலம் ஆபாச படங்களை அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது. இதுமட்டுமல்லாமல் மாணவிகளை அவரது அறைக்கு வருமாறு கூறி பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவிகள் என்ன செய்வது என்று தெரியாமல் பேசிக் கொண்டிருந்தனர்.அப்போது அதை அவர்கள் வகுப்பில் பயிலும் மற்ற மாணவர்களிடம் மாணவிகள் தெரிவித்து உள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள், பேராசிரியர் வினோத்குமார் இடம் நேரடியாக சென்று கேட்டுள்ளனர்.
அப்போது, உங்கள் வேலையை மட்டும் நீங்கள் பாருங்கள் என்று அவர்களிடம் தெரிவித்து உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த கல்லூரி மாணவர்கள் பேராசிரியர் வினோத்குமாருக்கு தர்ம அடி கொடுத்தனர். இந்த சம்பவம் குறித்து உடனடியாக லால்குடி சரக காவல்துறை கண்காணிப்பாளர் அஜய்தங்கத்திற்கு தெரிவிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து வருவாய் கோட்டாட்சியர் சுப்பிரமணியன் மற்றும் 20-க்கும் மேற்பட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும், பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனைத்தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து அழைத்து சென்றனர். பாடம் சொல்லி தரும் பேராசிரியரே கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் கொடுத்து சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் மாணவர்கள் இணைந்து அவருக்கு தர்மஅடி கொடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- ஷானு