திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த அண்ணனுர், தேவி நகரை சேர்ந்தவர் வள்ளிநாயகம் (32). இவர், திருமுல்லைவாயல் காவல் நிலையத்தில் ரோந்து வாகன ஓட்டுனராக பணிபுரிந்து வந்தார்.
கடந்த 5ம் தேதி நள்ளிரவு 2 மணியளவில், திருமுல்லைவாயலில் இருந்து ஆவடி நோக்கி சி.டி.எச் சாலையில் ரோந்து வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
ஆவடி காவல் ஆணையரகம் அருகே ரோந்து வாகனம் சென்றபோது முன்பக்க டயர் திடீரென வெடித்தது. இதனால் ரோந்து வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே இருந்த தடுப்பின் மீது வேகமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் வாகனத்தின் முன்பகுதி சேதமானது.
இந்த விபத்தில் பணியில் இருந்த வள்ளிநாயகம் மற்றும் உதவி ஆய்வாளர் முருகேசன் படுகாயம் அடைந்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த சக போலீசார் படுகாயம் அடைந்த காவலர்களை மீட்டு முதலுதவி சிகிச்சைக்கு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் வள்ளி நாயகத்தை கடந்த 8ம் தேதி ஆவடி காவல் ஆணையரகத்து தலைமையிடத்து துணை ஆணையர் உமையாள் தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்தார்.
இதனால் வள்ளிநாயகம் கடந்த 3 நாட்களாக மிகுந்த மனஉளைச்சலில் வீட்டில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று காலை வள்ளிநாயகத்தின் மனைவி திலகவதி பணிக்கு சென்றுவிட்டார். வீட்டில் வள்ளிநாயகம் மட்டும் தனியாக இருந்துள்ளார்.
வேலைக்கு சென்ற மனைவி வள்ளிநாயகத்தை செல்போனில் தொடர்பு கொண்டபோது அவர் அழைப்பை ஏற்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர் அக்கம் பக்கத்தினருக்கு தகவல் தெரிவித்து வீட்டில் சென்று பார்க்கும்படி கூறியுள்ளார்.
உடனே அக்கம் பக்கத்தினர் வீட்டுக்கு சென்று பார்த்தபோது வள்ளிநாயகம் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு வந்த திருமுல்லைவாயல் போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டதால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட காவலர் வள்ளிநாயகத்துக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பு:
வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் தற்காலிகமானதுதான். தற்கொலை எதற்கும் தீர்வாகாது. ஒருவேளை உங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ அல்லது தற்கொலை எண்ணம் உருவானாலோ அதில் இருந்து மீண்டும் வர கீழ்க்காணும் எண்களை அழைக்கலாம்.
மாநில உதவி மைய எண்: 104
சினேகா தொண்டு நிறுவனம்:
எண்-11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம், சென்னை - 600 028.
தொலைபேசி எண்: 044 24640050 மற்றும் 044 2464 0060