விருதுநகர் மாவட்டம், மல்லாங்கிணறு பகுதியைச் சேர்ந்தவர் காவலர் அருண்குமார் (27). இவரது மனைவி பிரியா. இவரும் காவலர். கடந்த மார்ச் மாதம் தான் இவர்களுக்கு திருமணம் ஆகியுள்ளது.
கடந்த 2022ம் ஆண்டு காவல்துறையில் பணிக்கு சேர்ந்த அருண்குமார் சென்னை அயனாவரம் வசந்தம் காலனியில் தங்கி, சென்னை ஆயுதப்படையில் உள்ள குதிரைப்படையில் காவலராக பணியாற்றி வந்தார்.
இன்று வழக்கம்போல் குதிரைப்படை அலுவலகம் சென்ற அருண்குமார் விடுமுறை சொல்லிவிட்டு அறைக்கு வந்துள்ளார். இதற்கிடையே இவரது அறையில் தங்கியிருந்த புஷ்பராஜ் வெளியே சென்றுவிட்டு 11.30 மணிக்கு வந்து பார்த்தபோது அருண்குமார் வீட்டில் தூக்கில் தொங்கியபடி இருந்ததை பார்த்து அயனாவரம் காவல் நிலையத்திற்கு தெரிவித்துள்ளார்.
தகவலறிந்து அயனாவரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர், காவலர் அருண்குமாரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், காவலர் அருண்குமார் பணிச்சுமையின் காரணமாக தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது குடும்ப பிரச்னை ஏதாவது காரணமா? என்ற கோணத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தற்கொலை செய்துகொண்ட அருண்குமார் பேசிய ஆடியோ வெளியானதாகவும், அதில் திருமணத்துக்கு கூட10 நாள் மட்டுமே விடுமுறை கிடைத்தது.
தற்போது அவள் வேறு இடத்திலும், நான் சென்னையிலும் வேலை பார்த்து வருகிறோம். போனில்தான் குடும்பம் நடத்தி வருகிறோம். போன் இல்லை என்றால் அவ்வளவுதான். லீவே கிடைக்கவில்லை’ என மனவிரக்தியில் பேசி இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
திருமணமாகி சில மாதங்களே ஆன நிலையில் காவலர் அருண்குமார் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
குறிப்பு:
நம்முடைய வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் தற்காலிகமானதுதான். தற்கொலை எதற்கும் தீர்வாகாது.
ஒருவேளை உங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ அல்லது தற்கொலை எண்ணம் உருவானாலோ அதில் இருந்து மீண்டும் வர கீழ்க்காணும் எண்களை அழைக்கலாம்.
மாநில உதவி மைய எண்: 104
சினேகா தொண்டு நிறுவனம்:
எண்-11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம், சென்னை - 600 028.
தொலைபேசி எண்: 044 24640050 மற்றும் 044 2464 0060