கேரளத் தலைநகர் திருவனந்தபுரம் வழுதக்காடு பகுதியைச் சேர்ந்தவர் நடராஜனின் மகன் சுவீந்திரன். தொழில் அதிபரான இவர் கடந்த வாரம் நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசனை சந்தித்து ஒரு மனு கொடுத்தார். அதில், எனது தந்தை நடராஜன் மிகப்பெரிய அளவில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இவருக்கு நெல்லை, தூத்துக்குடி, மதுரை மற்றும் கேரள மாநிலத்தின் பல இடங்களில் சொத்துக்கள் இருக்கின்றன. அவற்றின் மதிப்பு சுமார் 500 கோடி ஆகும்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் இறந்து போய் விட்டார். அவர் இறப்பதற்கு முன்பு ஒரு உயில் எழுதியிருக்கிறார். அதில் எல்லா சொத்துக்களும் எனது அண்ணன் ரவீந்திரன் பெயரில் எழுதப்பட்டிருந்தது.
இது குறித்து நான் விசாரித்த போதுதான் அது போலி உயில், நெல்லை மாவட்டம் திசையன்விளையைச் சேர்ந்த வக்கீல் சங்கர், அவரது மனைவியும் நோட்டரி பப்ளிக்குமான சுபாவும் போலி உயில் தயாரித்து எனது அண்ணனுக்கு கொடுத்திருப்பது தெரியவந்தது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருந்தார். உடனடியாய் எஸ்.பி சிலம்பரசன் இந்த மனுவை நில அபகரிப்பு போலீசுக்கு அனுப்பி விசாரிக்க உத்தரவிட்டார்.
இது குறித்து அப்பிரிவு சப் இன்ஸ்பெக்டர் ராஜா கூறுகையில், ”எங்கள் விசாரணையிள் சுவீந்திரன் கூறியிருப்பது உண்மை என தெரிய வந்திருக்கிறது. எனவே, வக்கீல்கள் சங்கர், சுபா, சாட்சி கையெழுத்திட்ட மேலும் மூன்று பேர் உள்ளிட்ட ஐந்து பேர்கள் மீது வழக்குப் பதிவு செய்திருக்கிறோம், தொடர்ந்து விசாரணை நடக்கிறது” என்றார்.