வேலூர்: தந்தை மரண வழக்கில் சிக்கிய மகள் - அதிர்ச்சி பின்னணி

தந்தை உயிரிழந்த விவகாரத்தில் திடீர் திருப்பமாக பெற்ற மகளே கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோப்பு படம்
கோப்பு படம்

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த வடவிரிஞ்சிபுரம் அருகே உள்ள அக்கரை பகுதியைச் சேர்ந்தவர் மார்கபந்து (84). இவரது மனைவி கடந்த சில நாட்களுக்கு முன்பு இறந்துவிட்டார்.

கடந்த 20ம் தேதி மார்கபந்து தனது வீட்டின் அருகே தலையில் பலத்த காயத்துடன் கிடந்தார். அவரை மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக உறவினர்கள் சேர்த்துள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி மார்கபந்து உயிரிழந்தார்.

இதனைத் தொடர்ந்து மார்கபந்துவின் மகன் சீனிவாசன் என்பவர் தனது தந்தையின் சாவில் சந்தேகம் இருப்பதாக, லத்தேரி காவல் நிலையத்தில் புகார் மனுவை அளித்தார்.

அதன்பேரில் போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து இறந்துபோன மார்கபந்துவின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் மருத்துவமனையில் இருந்து நேற்று பிரேத பரிசோதனை அறிக்கை வந்தது. அதில் மார்கபந்து கீழே விழுந்ததில் தலையில் அடிபட்டு மரணம் அடைந்தது தெரிந்தது.

இதையடுத்து போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டபோது மார்கபந்து கீழே தள்ளி விடப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து போலீசார் கூறுகையில் ‘சம்பவம் நடந்த அன்று மார்கபந்து வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அவரது மகள் கோட்டீஸ்வரி சொத்து தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த சென்றுள்ளார்.

இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது மார்கபந்து கோட்டீஸ்வரி முகத்தில் கோபத்தில் எச்சில் துப்பி உள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த கோட்டீஸ்வரி மார்கபந்துவை பிடித்து, கீழே தள்ளியுள்ளார். இதில் கீழே விழுந்த மார்கபந்து தலையில் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்துள்ளார்’ என்றனர்.

இதையடுத்து கோட்டீஸ்வரியை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். தந்தை உயிரிழந்த வழக்கில் பெற்ற மகளே கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com