கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள தே.கோபுராபுரம் கிராமத்தை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் அறிவு என்ற அறிவழகன் (45). மனநலம் பாதிக்கப்பட்டவர்.
இவர், நேற்று முன்தினம் குப்பநத்தம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை அருகே மது அருந்திக்கொண்டு இருந்த ஒருவரது செல்போனை பறித்ததாகக் கூறி மர்ம கும்பல் அறிவழகனை சரமாரியாக தாக்கியது.
இதில் அறிவழகன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். இதுதொடர்பான புகாரின்பேரில் விருத்தாசலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அறிவழகனை அடித்துக் கொன்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வந்தனர்.
போலீஸ் விசாரணையில் விருத்தாசலம் குப்பநத்தம் பகுதியைச் சேர்ந்த கோபால் (22) என்பவரது செல்போனை அறிவழகன் பறித்ததாகக் கூறி கோபால் மற்றும் அவரது நண்பர்கள் திருவரசன் (21), அமீர்பாஷா (20) மற்றும் செந்தமிழ்ச்செல்வன் (21) ஆகிய 4 பேர் சேர்ந்து அறிவழகனை அடித்துக் கொலை செய்தது தெரியவந்தது.
இதனை அடுத்து கோபால் உள்ளிட்ட 4 பேரையும் போலீசார் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். செல்போன் பறித்ததாக குற்றம்சாட்டி, மனநோயாளி சரமாரியாக அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் விருத்தாசலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.