விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள வீரசோழன் கிராமத்தை சேர்ந்தவர் கற்பகவள்ளி (24). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த துரைராஜ் என்பவரது மகன் மாரிமுத்துவுக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
தம்பதிக்கு 2 பெண் குழந்தைள் உள்ளனர். இந்நிலையில் மாரிமுத்துவுக்கு, அதே பகுதியை சேர்ந்த வேணி என்பவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதனால் குடும்பத்தில் பிரச்னை ஏற்பட்டுள்ளது.
இந்த பிரச்னையை வீட்டில் உள்ள பெரியவர்கள் சேர்ந்து பேசி சமாதானம் செய்து வைத்துள்ளனர். இதையடுத்து கற்பகவள்ளி தந்தை ஊரான பாதனகுறிச்சி பகுதியில் கணவனை அழைத்துச் சென்று குடும்பம் நடத்தி வந்தார்.
இந்நிலையில் மாரிமுத்து தனது மனைவி கற்பகவள்ளியை அழைத்து பேசியுள்ளார். அப்போது ‘எனது கள்ளக்காதலி வேணியை இந்த வீட்டுக்கு அழைத்து வருகிறேன். எல்லோரும் சேர்ந்து ஒரே குடும்பமாக வாழ்வோம்’ என கூறியுள்ளார்.
இதை கற்பகவள்ளி ஏற்க மறுத்து கோபத்தில் கத்தியுள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த மாரிமுத்து மனைவி கற்பகவள்ளியின் கழுத்தை நெரித்து கீழே தள்ளி அரிவாளால் வெட்ட முயன்றதாக கூறப்படுகிறது.
கற்பகவள்ளியின் அலறல் சத்தம்கேட்டு, அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து மாரிமுத்துவிடம் இருந்து கற்பகவள்ளியை காப்பாற்றினர். இதுகுறித்த புகாரின்பேரில் வீரசோழன் போலீசார் மாரிமுத்து மீது ஆயுதத்தைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்தது உள்பட ஜாமீனில் வெளிவர முடியாதபடி 4 வழக்குகளை அவர் மீது பதிவு செய்து தீவிரமாக தேடி வருகின்றனர்.