சட்டவிரோத பணப்பரிமாற்றம் செய்யப்பட்டதாக அமலாக்கத்துறையினர் தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கை உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் தனக்கு வழங்கக் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் மனுத்தாக்கல் செய்யபட்டுள்ளது.
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் கடந்த ஜூன் 14ஆம் தேதி கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி கைது சரியானது என உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு பிறகு, ஆகஸ்ட் 7 முதல் 12 வரை தங்களை வைத்து விசாரித்த அமலாக்கத்துறை, அவரை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு ஆஜர்படுத்தப்படுத்தியது. அப்போது, செந்தில்பாலாஜி மீது 120 பக்கங்களுக்கும் மேற்பட்ட குற்றப்பத்திரிகையும், மூவாயிரம் பக்கங்களை கொண்ட ஆவணங்களையும் டிரங்க் பெட்டியில் வைத்து தாக்கல் செய்தது. இதையடுத்து, செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை நான்காவது முறையாக நீட்டித்த அமர்வு நீதிமன்றம், ஆகஸ்ட் 25ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டது.
இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கதுறையினர் தாக்கல் செய்த கைது குறிப்பாணை, குற்றப்பத்திரிகை, அதனுடன் தாக்கல் செய்த ஆவணங்கள் என அனைத்து விபரங்களையும் முழுமையாக வழங்கக்கோரி செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று மனுத்தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக கூறி, நீதிபதி அல்லி முன்பு முறையீடு செய்யப்பட்டது.
இதையடுத்து அமலாக்கதுறை தரப்பிற்கு மனுத்தாக்கல் குறித்த தகவலை தெரிவிக்க செந்தில் பாலாஜி தரப்பிற்கு அறிவுறுத்தல் வழங்கினார்.
குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துவிட்டதால், அதன் நகலை குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு வழங்குவது வழக்கமான நடைமுறையாக உள்ளது.ஆனால் செந்தில் பாலாஜி தரப்பில் ஜாமின் மனுத்தாக்கல் செய்யும் முன், எதன் அடிப்படையில் ஜாமின் கோரலாம் என்பது குறித்து முடிவெடுப்பதற்காக ஆவணங்களை கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.