பிச்சைக்காரன் -2 திரைப்படத்தை வெளியிட அனுமதி அளித்துள்ள சென்னை உயர்நீதிமன்றம், படத்தின் மூலம் கிடைக்கும் வருவாய் விவரங்களை ஆடிட்டர் சான்றிதழுடன் 60 நாட்களில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.
’பிச்சைக்காரன் 2’ படத்திற்கு தடை விதிக்கக் கோரி சென்னையைச் சேர்ந்த ராஜகணபதி என்பவர் மனுதாக்கல் செய்தார். அந்த மனுவில், தங்களது தயாரிப்பு நிறுவனம் நடிகர் ஆர்.பாண்டியராஜன் நடிப்பில் ஏற்கெனவே ஆய்வுக்கூடம் என்ற படத்தைத் தயாரித்து கடந்த 2016-ம் ஆண்டு வெளியான படத்தின் கதையைத் தங்களின் அனுமதியின்றி அப்படியே காப்பியடித்து விஜய் ஆண்டனி நடிப்பில் படத்தை எடுத்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டு இருந்தது. மேலும் இதற்கு நஷ்ட ஈடாக ₹10 லட்சம் வழங்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்திருந்தார்.
இதற்கு பதில் மனுதாக்கல் செய்த தயாரிப்பாளர் விஜய் ஆண்டனி, ஆய்வுக்கூடம் படம் குறித்த எந்தத் தகவலும் தமக்கு தெரியாது எனவும், அந்தப் படத்தை தாம் பார்த்தது கூட இல்லை எனவும் கூறியுள்ளார். வழக்குத் தொடரப்பட்ட பின்னரே அந்தப் படத்தைப் பார்த்ததாகவும், பிச்சைக்காரன் - 2 படத்திற்கும் ஆய்வுக்கூடம் படத்திற்கும் எந்த ஒற்றுமையும் இல்லை எனவும் விஜய் ஆண்டனி கூறியிருந்தார்.
இந்நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.சவுந்தர் பிச்சைக்காரன்-2 படத்தை வெளியிட அனுமதி அளித்தார். அதே வேளையில் படத்தை வெளியிடுவதன் மூலம் கிடைக்கும் வருவாய் விவரங்களை ஆடிட்டர் சான்றிதழுடன் 60 நாட்களில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டுமெனவும் தயாரிப்பாளர் விஜய் ஆண்டனிக்கு உத்தரவிட்டுள்ளார்.