மயிலாடுதுறை மாவட்டத்தில் சமீபகாலமாக பகுதிநேர வேலை வாய்ப்பு என்றபடி சமூக வலைத்தளங்களில் விளம்பரங்கள் வெளியாகி வருகிறது. இதனை நம்பி ஏமாறுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதில் மயிலாடுதுறை மாவட்டம் அல்லாது பிற மாவட்டங்களிலும் அதிக அளவில் பாதிக்கப்படக்கூடியவர்கள் படித்துவிட்டு வேலையில்லாமல் இருக்கும் பட்டதாரி இளைஞர்கள் மற்றும் பட்டதாரி பெண்கள் தான்.
இது தொடர்பான மோசடிகள் தற்போது அதிக அளவில் அரங்கேறுவதால் மயிலாடுதுறை மாவட்ட சைபர் கிரைம் போலீசார் மக்களுக்கு தொடர் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பிரச்சார பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது குறித்து மயிலாடுதுறை மாவட்ட சைபர் கிரைம் ஆய்வாளர் புயல் பாலச்சந்திரனிடம் பேசினோம். "இவர்களுடைய டேட்டாக்கள் இவர்கள் வேலை வாய்ப்புகள் தேடுவதற்காக சுய விவரங்களை Linked in ,indeed, Naukri.com போன்ற இளையதளங்களில் பதிவிடுகின்றனர். இதன்மூலம் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் பாதிக்கப்பட்டவர்களின் சுய விவரங்களை திருட்டுத்தனமாக தெரிந்து கொண்டு மேற்கண்ட பகுதி நேர வேலை எனக்கூறி சில தொகைகளை கட்ட சொல்லி task கொடுத்து இன்வெஸ்ட்மென்ட் என்ற பெயரில் பல லட்சங்களை சுருட்டி விடுகின்றனர்.
எனவே இது போன்ற பகுதி நேர வேலை என்ற வெப்சைட்களை பயன்படுத்த வேண்டாம் என்றும் அதேபோல் தங்களுடைய சுய விவரங்களை தேவையில்லாமல் எந்த வெப்சைட்டிலும் பதிவு செய்ய வேண்டாம் எனவும் பிரபலமான நிறுவனங்களின் பெயரில் போலியான வேலை வாய்ப்புகள் உள்ளதாக SMS, Emails, Online job website மூலமாக விளம்பரங்களை அனுப்பி உங்களை ஏமாற்றக்கூடும்.
அவர்கள் ஏதேனும் காரணம் கூறி பணம் செலுத்தக் கூறினால் அவர்களிடம் பணத்தை செலுத்தி ஏமாறாதீர்கள். மேலும் இது போன்ற அசம்பாவிதங்கள் உங்களுக்கு நடந்து விட்டால் பதட்டம் அடையாமல் உங்கள் மாவட்டத்தில் உள்ள சைபர் கிரைம் காவல் நிலையத்தை அணுக வேண்டும் அல்லது உடனடியாக மாநில சைபர் கிரைம் உதவி எண் 1930, 24 மணி நேரத்துக்குள் தொடர்பு கொண்டால் உங்களது பணம் மீட்டுத்தரப்படும். எனவே இது போன்ற விஷயங்களில் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும்" என்றார்.
- ஆர்.விவேக் ஆனந்தன்.