பாளையங்கோட்டை, மகராஜநகர், வேடவர் காலனியில் வசிப்பவர் செந்தூர்குமார், 55வயது. சி.பி.சி.ஐடி போலீசின் ஒரு பிரிவான ஓ.சி.ஐ.யு அதாவது ஒருங்கிணைந்த குற்ற உளவுப்பிரிவு இன்ஸ்பெக்டராக பணியாற்றுகிறார். தினமும் காலை 10 மணிக்கு அலுவலகம் வந்து விடுவார். ஆனால், கடந்த 19ம் தேதி காலை 8 மணிக்கெல்லாம் அலுவலகத்திற்கு வந்திருக்கிறார்.
இது குறித்து சக போலீசார் கேட்டதற்கு சிரித்து மழுப்பிவிட்டு தனது அறைக்குள் சென்றவர் பொத்தென மயங்கி தரையில் விழுந்திருக்கிறார். இதனால், அதிர்ச்சி அடைந்த போலீஸ்காரர்கள் உடனடியாக அவரை பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் குருணை மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றிருப்பதாகத் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து பெருமாள் புரம் போலீசார் அங்கு வந்து இன்ஸ்பெக்டர் செந்தூர்குமாரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
இன்ஸ்பெக்டர் ரேஞ்சிலிருக்கும் ஒருவர் திடீரென தற்கொலைக்கு முயன்ற காரணம் குறித்து விசாரித்தனர். இது குறித்து விசாரணை அதிகாரி ஒருவர் கூறுகையில், ’’கடந்த ஏழு ஆண்டுகளாய் செந்தூர்குமார் இதே சி.ஐ.டி பிரிவில் வேலை செய்து வருகிறார். தற்போது அவர் மதுரை மண்டலத்திற்கு இடமாறுதல் செய்யப்பட்டு இருக்கிறார். இதனால் மிகவும் டென்சனாக காணப்பட்டிருக்கிறார். தவிர, கொலைக்குற்றவாளி ஒருவருடன் இவரை இணைத்து சில போலீஸ்காரர்கள் பெட்டிசன் போட்டிருப்பதை அறிந்தவரால் அதை தாங்க முடியாமல் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றிருக்கலாம்’’என்று கூறினார். இன்ஸ்பெக்டர் செந்தூர்குமாரின் மனைவி ஒரு அரசு மருத்துவர்.