பாரம்பரிய விளையாட்டுகளான ஜல்லிக்கட்டு மற்றும் மாட்டு வண்டி பந்தயத்தை நடத்த தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிரா அரசுகள் கொண்டுவந்த சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.
ஜல்லிக்கட்டிற்காக தமிழகத்தில் நடத்தப்பட்ட போராட்டங்களை யாரும் மறந்திருக்க முடியாது. தமிழ்நாட்டின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு பொங்கல் பண்டிகையின்போது மதுரை பாலமேடு, அவனியாபுரம் உள்ளிட்ட இடங்களில் வெகு விமர்சையாக நடத்தப்படுவது வழக்கம். ஆனால் இந்த ஜல்லிக்கட்டு போட்டிகளின்போது காளைகள் துன்புறுத்தப்படுவதாக சொல்லி, அதற்கு எதிராக விலங்குகள் நல வாரியம், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் கடந்த 2014-ம் ஆண்டு மே 8-ந் தேதி ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்து தீர்ப்பளித்தது.
இது தமிழகத்தில் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், வீரர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இது தமிழகம் முழுவதும் பெரும் போராட்டமாக வெடித்தது. இளைஞர் பட்டாளங்கள் ஒன்றுபட்டு பலவிதமான போராட்டங்களை நடத்தினார்கள். அதிலும், சென்னை மெரினா கடற்கரையில் ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராக நடந்த போராட்டமானது, நாடு முழுவதும் பெரும் கவனத்தை ஈர்த்தது. இதை சமாளிக்க முடியாத தமிழ்நாடு அரசு ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த வகைசெய்து அவசர சட்டம் இயற்றியது. ’விலங்குகள் வதைத் தடுப்பு சட்டம் (தமிழ்நாடு திருத்தம்)-2017’என்ற பெயரில் நிரந்தரச் சட்டமும் இயற்றப்பட்டது. அதன் பேரில் தான் தமிழகத்தில் தொடர்ந்து ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது.
அதேபோல, மகாராஷ்டிர அரசும் மாட்டு வண்டி பந்தயத்தை அனுமதிக்க சட்டத்திருத்தம் செய்துள்ளது. இந்த இரு மாநில சட்டங்களையும் எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பீட்டா போன்ற அமைப்புகளால் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் மீதான விசாரணையின் போது, "ஜல்லிக்கட்டு போன்ற காளைகளை அடக்கும் விளையாட்டுகளில் மனிதர்களின் பொழுதுபோக்கிற்காக விலங்குகளை பயன்படுத்தலாமா? நாட்டு மாடுகளைப் பாதுகாக்க விளையாட்டு எப்படி அவசியமாகிறது? என்று தமிழக அரசுக்கு, உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இதற்கு தமிழக அரசு, ஜல்லிக்கட்டு என்பது வெறும் பொழுதுபோக்கு அல்லது கேளிக்கை அல்ல என்றும் வரலாற்று, கலாச்சார மற்றும் மத முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு என்று பதிலளித்ததோடு,ஜல்லிக்கட்டில் காளைகளுக்கு எந்த கொடுமையும் இழைக்கப்படுவதில்லை, ஜல்லிக்கட்டில் ஈடுபடும் காளைகள் ஆண்டு முழுவதும் விவசாயிகளால் பராமரிக்கப்படுகின்றன. கேளிக்கையின் இயல்பு கொண்ட விளையாட்டு செயல்பாடு கலாச்சார மதிப்பைக் கொண்டிருக்க முடியாது என்ற கருத்து தவறானது" என்றும் உச்சநீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சார்பிலும் இந்த வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
இதற்கான விசாரணை கடந்த டிசம்பர் மாதமே முடிவுற்ற நிலையில் இன்று உச்சநீதிமன்றத்தில் கே.எம். ஜோசப், அஜய் ரஸ்தோகி, அனிருத்தா போஸ், ஹிருஷிகேஷ் ராய் மற்றும் சி.டி.ரவிக்குமார் ஆகியோர் அடங்கிய 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு முன் தீர்ப்பளிக்கப்பட்டது. அதில் ஜல்லிக்கட்டுக்கு தடையில்லை என நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்.
மேலும், ஜல்லிக்கட்டு கலாச்சாரமாக இருந்தாலும் துன்புறுத்தல்களை தவிர்ப்பதற்கான வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர். தமிழக அரசின் சட்டத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல் தந்ததால் அதில் தவறு இருக்க வாய்ப்பில்லை என்றும் இவ்வழக்கு தொடர்பாக தமிழக அரசு அளித்துள்ள ஆவணங்கள் திருப்திகரமாக உள்ளன என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். மேலும் இது மகாராஷ்டிரா, கர்நாடாகவில் நடத்தப்படும் எருதுவிடும் விழாவிற்கும் பொருந்தும் என தெரிவித்தனர்.
இதுகுறித்து ஓ.பன்னீர் செல்வம் கூறும் போது, “பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிகட்டு என்னும் நமது உரிமை நிலைநாட்டப்பட்டது, உலகெங்கும் வாழும் தமிழக மக்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் தீர்ப்பு இது” என தெரிவித்துள்ளார்
இதுகுறித்து முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறும் போது, ”இந்த தீர்ப்பு மகிழ்ச்சியளிக்கிறது. தமிழர்களுடைய பண்பையும், மரபையும், பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும், உரிமையையும் நிலைநாட்டக்கூடிய மகத்தான தீர்ப்பு இது. இதற்காக மெரினாவில் போராடிய இலட்சக்கணக்கானோரின் மனநிலையை புரிந்துக் கொண்டு அதிமுக அரசு அவசர சட்டம் இயற்றியது. இந்த தீர்ப்பானது மெரினாவில் போராடியவர்களுக்கு கிடைத்த வெற்றி, சரியான நிலைபாடை எடுத்த மத்திய அரசுக்கு கிடைத்த வெற்றி, மாடுபிடி வீரர்களுக்கும், மாடு வளர்ப்பவர்களுக்கும் கிடைத்த வெற்றி என தெரிவித்துள்ளார்.