மாநில கல்விக்கொள்கை குழுவில் இருந்து பேராசிரியர் ஜவஹர் நேசன் பதவி விலகலுக்கான காரணத்தை அரசு ஆராய வேண்டும் என திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார்.
தமிழ்நாடு அரசின் மாநில கல்விக்கொள்கையை வடிவமைப்பதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் உயர்நிலைக்குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவில் உறுப்பினராக இடம் பெற்றிருந்த பேராசிரியர் ஜவஹர் நேசன் அரசு அதிகாரிகளின் தலையீடு இருப்பதாகக் கூறி சமீபத்தில் அப்பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். இந்த நிலையில் ஜவஹர் நேசனின் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது எனச் சக உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்து மதுரையில் பேசிய விசிக தலைவரும், எம்.பியுமான திருமாவளவன், ”பேராசிரியர் ஜவஹர் நேசன் மாநில கல்விக்கொள்கை குழுவில் இருந்து பதவி விலகியதும், அவர் சில குறிப்பிட்ட குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார். அதனைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
அரசு இதனை ஆராய வேண்டும். பதவி விலகலுக்கான காரணத்தில் எந்த அளவிற்கு உண்மை இருக்கிறது என்பது தெரியாது. ஆனாலும் கூட மாநில கல்விக்கொள்கையை வரையறுக்கக்கூடிய குழுவில் இந்திய ஒன்றிய அரசை சார்ந்த அல்லது ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சார்ந்த சக்திகளின் ஆதிக்கம் இருக்கிறது என்பதை எளிதாகக் கடந்து போய்விட முடியாது. அதனைப் புறந்தள்ளிவிட முடியாது. எனவே அரசு இந்த விவகாரத்தை கவனித்தில் எடுத்துக்கொண்டு ஆராய வேண்டும்” என்றார்.