நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவு தேர்வு கடந்த மே மாதம் 7ம் தேதி நடந்தது. மொத்தம் 499 நகரங்களில் நடந்த இந்த தேர்வை 20 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதினர்.
தேர்வில் முறைகேடுகளைத் தடுக்கும் வகையில் பல்வேறு கண்காணிப்பு நடவடிக்கைகளை தேசிய தேர்வு முகமை மேற்கொண்டது. இதன் ஒருபகுதியாக பல்வேறு கட்ட சோதனைகளுக்கு பிறகே தேர்வறைக்குள் மாணவ மாணவிகள் அனுமதிக்கப்பட்டனர்.
இதற்கிடையே நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில் தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர் பிரபஞ்சன் மற்றும் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த போரா வருண் சக்கரவர்த்தி ஆகியோர் முதலிடம் பெற்று அசத்தியுள்ளனர்.
மேலும் நாடு முழுவதும் முதல் 10 இடங்களில் தமிழகத்தை சேர்ந்த 4 மாணவர்கள் இடம் பிடித்து அசத்தியுள்ளனர். நீட் தேர்வில் கடந்த ஆண்டு தமிழ்நாட்டில் 57,250 மாணவர்கள் தேர்ச்சி அடைந்திருந்த நிலையில் இந்த ஆண்டு, தமிழ்நாட்டில் 78,693 பேர் தேர்ச்சி பெற்று இருப்பது தேர்ச்சி விகிதம் அதிகரித்திருப்பதையே காட்டுவதாக கருத்து எழுந்துள்ளது.