நாகை: புயல் எச்சரிக்கையால் தொழில் முடக்கம்- வேதாரண்யம் மீனவர்கள் வேதனை
‘மோக்கா’ புயல் எச்சரிக்கையால் தொழில் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் வேதரண்யம் மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே கோடியக்கரை, ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம், வானவன்மாதேவி, மணியன் தீவு உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் உள்ளன. சுமார் 7000க்கும் அதிகமான மீனவர்கள் கடலில் சென்று மீன்பிடித்து தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுமண்டலம் புயலாக மாறியுள்ளது.
இந்த புயலுக்கு ‘மோக்கா’எனவும் பெயரிட்டுள்ளனர். இந்த புயலால் ஒட்டுமொத்த வங்கக்கடல் பகுதியும் கொந்தளிப்பு மற்றும் சூறாவளிக்காற்றுடன் ஆபத்து நிறைந்ததாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கும் நிலையில் ’கடலுக்கு மீனவர்கள் யாரும் மீன்பிடிக்கச்செல்லவேண்டாம்’என்று மீன்வளத்துறை அதிகாரிகளூம் எச்சரிக்கை செய்திருக்கின்றனர். இதனைத் தொடந்து மீனவர்கள் யாரும் மீன் பிடிக்கச்செல்லவில்லை. இந்த புயல் எச்சரிக்கையால் தங்களது மீன் பிடி தொழில் முடங்கியிருப்பதாக மீனவர்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.
கோடியக்கரையைச் சேர்ந்த மீனவர் சீனிவாசனிடம் பேசினோம். ”தற்போது ஏப்ரல் 15ம் தேதி முதல் ஜுன் 15ம் தேதி வரை மீன்பிடி தடைக்காலம் அமலில் இருந்துவருகிறது. இந்த தடைக்காலத்தில் பெரிய விசைப்படகுகள் மட்டும் மீன்பிடிக்க கடலுக்கு செல்வதில்லை. மற்றபடி சிறு பைபர் படகுகள், கட்டுமாங்கள் ஆகியவற்றில் சென்று மீன் பிடிப்பவர்கள் தங்கள் தொழிலை செய்து ஓரளவு பிழப்பு நடத்திவந்தனர். பொதுமக்களுக்கான மீன் தேவைகளும் ஓரளவு சரி செய்யப்பட்டு வந்தது.
இந்நிலையில் தற்போது வங்கக்கடலில் உருவாகியிருக்கும் ‘மோக்கா’ புயலால் கடல் ரொம்பவும் ‘ரஃப்பாக’ காணப்படுவதால் யாரும் கடலுக்கு மீன்பிடிக்கச்செல்லக்கூடாது என்று வானிலை ஆய்வு மையமும், மீன்வளத்துறை அதிகாரிகளும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த கோடைக்காலத்தில் இப்படியொரு புயலை மீனவர்கள் எதிர்பார்க்கவில்லை. கடலுக்கு மீன்பிடிக்க செல்ல முடியாததால் மீனவர்கள் பெரும் வேதனை அடைந்துள்ளனர். இந்த தடை எத்தனை நாட்கள் எனத் தெரியவில்லை. இதனால், வேதாரணயம் பகுதியிலுள்ள 700க்கும் மேற்பட்ட பைபர் படகுகளை கரையில் பாதுக்காப்பாக நிறுத்தி, மீன் பிடிவலைகளையும் பத்திரமாகச் சுருட்டி வைத்துள்ளனர். புயல் கரையை கடந்தவுடன் கடலுக்கு செல்ல அனுமதி வழங்கப்படும் என்று நினைக்கிறோம். எதிர்பாராத தொழில் முடக்கத்தால் மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.” என்றார்.
-ஆர்.விவேக் ஆனந்தன்.