கும்பகோணத்தில் சுதந்திர தினத்தையொட்டி, தேசியக்கொடி ஏற்றும்போது தேசியக்கொடி கீழே விழுந்ததால் கோபத்தில் விழா ஏற்பாட்டாளர்களை எம்.எல்.ஏ அடிக்க பாய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் 77-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது. இதில் 8-வது என்.சி.சி பட்டாலியன் கர்னல் எஸ்.சந்திரசேகரன் தேசிய கொடியை ஏற்றினார்.
அப்போது மேலே ஏற்றப்பட்ட தேசியக்கொடி நாடா இல்லாமல் திடீரென்று கீழே விழுந்தது. அருகில் இருந்த சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன், முதன்மை சார்பு நீதிபதி ஆகியோர் பதட்டம் அடைந்தனர். அப்போது விழா நடத்தும் அலுவலர்களை எம்.எல்.ஏ அன்பழகன் அடிக்க கையை ஓங்கி கடுமையாக சாடினர்.
அதன்பின்னர் தேசிய கொடியை எடுத்து வந்து 2வது முறையாக கர்னல் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். அப்போது சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
இதனை அடுத்து,சுவாமி விவேகானந்தர் சிலைக்கு மாலை அணிவித்து ராமகிருஷ்ண மடம் சுவாமி விமூர்த்தானந்த மகராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
முன்னதாக திருவள்ளுவர் மற்றும் சுவாமி விவேகானந்தர் ஓவியங்களை டைப்போகிராபிக் முறையில் வரைந்து சாதித்த திருபுவனம் பிளஸ் 1 படிக்கும் மாணவி சங்கமித்ராவை பாராட்டி சான்றிதழ் மற்றும் ரூ.10 ஆயிரம் பணம் முடிப்பு வழங்கப்பட்டது.
மாணவிகளின் சுதந்திர தின சிறப்பு பரத நடன நிகழ்ச்சி நடைப்பெற்றது.விழாவில் போர்ட்டர் டவுன் ஹால் கிளப் உறுப்பினர்கள் மற்றும் தமிழ் சங்கம் உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகள், ஊராட்சி மன்ற தலைவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.