சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி பேசியது நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "சனாதனத்தை எதிர்க்க முடியாது, ஒழிக்க தான் முடியும்" என்று பேசியிருந்தார். அதற்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் வந்தது.
தமிழ்நாட்டில் பலர் உதயநிதிக்கு ஆதரவாக பேசியுள்ளனர். இயக்குநர் வெற்றிமாறன், பா.ரஞ்சித் உட்பட பலர் உதயநிதி பக்கம் நிற்போம், அவர் பேசியது சரி என்றே சொல்லி வருகின்றனர். மறுபக்கம் வட இந்தியாவில் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. உதயநிதி தலையை கொண்டு வருபவருக்கு ரூ.10 கோடி தரப்படும் என்று அயோத்தி சாமியார் ஒருவர் வீடியோ வெளியிட்டார். அது பிரச்னையை மேலும் பெரிதாக்கியிருக்கிறது.
இந்தியாவின் ஏதோ மூலையில் இருக்கும் ஒரு சாமியார், ஒரு மாநிலத்தின் அமைச்சரை பேசியிருப்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறீர்கள் என்று தமிழ்நாட்டில் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதையடுத்து, சனாதனம் குறித்து உதயநிதி பேசியதற்கு முதன் முதலாக பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. "சனாதனம் குறித்து இழிவாக பேசுபவர்களுக்கு தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும் என மத்திய அமைச்சர்களுக்கு மோடி உத்தரவிட்டுள்ளதாக" செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், "ஒரு செய்தி வந்தால் அது உண்மையா, பொய்யா என்பதை அறிந்துகொள்ளும் அனைத்து வசதிகளும் நாட்டின் பிரதமருக்கு உண்டு. அப்படி இருக்கையில் அமைச்சர் உதயநிதி சொல்லாத ஒன்றை சொன்னாதாகப் பரப்பியது குறித்து பிரதமர் மோடி அறியாமல் பேசுகிறாரா? அல்லது அறிந்துதான் பேசுகிறாரா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.