அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை சிறப்பு நீதிமன்ற அதிகாரம் கொண்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் விசாரித்து உத்தரவு பிறப்பக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமலாக்கத்துறையால் கடந்த ஜூன் 14ம் தேதி கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தார்.
நீதிபதிகள் எம்.சுந்தர், ஆர்.சக்திவேல் அமர்வு செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை விசாரிக்க மறுத்த நிலையில், வழக்கிலிருந்து அதிகாரப்பூர்வமாக விலகுவதாக நீதிபதி சக்திவேல் செப்டம்பர் 02ம் தேதி அறிவித்தார்.
இந்நிலையில் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை எந்த நீதிமன்றம் விசாரிப்பது என்பது குறித்து முடிவு செய்ய நீதிபதிகள் சுரேஷ்குமார், குமரேஷ் பாபு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், கடந்த 78 நாட்களாக செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலில் சிறையில் உள்ளார். சிறப்பு நீதிமன்றத்தில் அவர் மீதான விசாரணை முடிந்துவிட்டதாகவும், மறு விசாரணை தேவையில்லை என அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் 14ம் தேதி முதல் சிறப்பு நீதிமன்றத்தில், நிலுவையில் இருக்கும் இந்த வழக்கில், ஜாமீன்மனுவை யார் விசாரிப்பது என செந்தில் பாலாஜி மற்றும் அமலாக்கத்துறை தரப்பில் உரிய விளக்கம் அளிக்கப்படவில்லை.
மத்திய வருவாய் மற்றும் நிதித்திறை அறிக்கையில் பிரிவு 43ன் படி சிறப்பு நீதிமன்றங்கள் எம்.பி. எம்.எல்.ஏக்களுக்கான வழக்குகளை விசாரிக்க மட்டுமே அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் 2019ம் ஆண்டு முதல் தற்போது 3 நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகிறது.
சிறப்பு நீதிமன்றங்களில் 1 மற்றும் 2 நீதிமன்றங்கள் மாவட்ட நீதிமன்றத்துக்கான அதிகாரமும், 3வது நீதிமன்றம் நடுவர் நீதிமன்றத்துக்கான அதிகாரத்துடன் செயல்படுகிறது. அரியலூர், திருச்சி, மதுரை மற்றும் சென்னையில் இயங்கும் மாவட்ட நீதிமன்றங்கள் சிறப்பு நீதிமன்றங்களாகவும் செயல்படுகின்றன.
சட்டவிரோத பணபரிவர்த்தனை சட்டம் 4ன் படி தண்டனைக்கு உரிய குற்றத்தை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்திருப்பதாக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. அதன்படி, பிரிவு 43(1)ன்படி சிறப்பு அதிகாரம் கொண்ட மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை விசாரிக்க முழு அதிகாரம் உள்ளது.
சிறப்பு நீதிமன்றத்தில் தொடரப்பட்ட ஜாமீன் மனுவை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் விசாரித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.