சட்டவிரோத பணபரிமாற்ற தடை சட்டத்தில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
சட்டவிரோத பணபரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் கடந்த ஜூன் 14ஆம் தேதி அமலாக்கத் துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அவரை அமலாக்கத்துறை கைது செய்தது சரி என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு, ஐந்து நாட்கள் அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்கப்பட்டார்.
அதன்பின், 5 நாட்கள் அமலாக்கத்துறை விசாரணைக்கு பின் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆகஸ்ட் 12ஆம் தேதி ஆஜர்படுத்தபட்டபோது, ஆகஸ்ட் 25ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டது.
அன்றைய தினமே, செந்தில்பாலாஜி மீது 120 பக்கங்களுக்கும் மேற்பட்ட குற்றபத்திரிகையும், 3 ஆயிரம் பக்கங்களை கொண்ட ஆவணங்களையும் டிரங்கு பெட்டியில் வைத்து அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.
இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத்துறை தாக்கல் செய்த வழக்கு, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு ஆகஸ்ட் 17ம் தேதி மாற்றப்பட்டது.
சிறப்பு நீதிமன்ற நீதிபதி ரவி முன்பு நேற்று (ஆகஸ்ட் 28) வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நேரில் ஆஜரான செந்தில் பாலாஜிக்கு குற்றப்பத்திரிக்கை நகல் வழங்கப்பட்டது. அப்போது செந்தில் பாலாஜி தரப்பில், குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், செந்தில் பாலாஜி கடந்த 2 மாதங்களாக நீதிமன்ற காவலில் இருப்பதால் ஜாமீன் மனுவை விசாரணைக்கு ஏற்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. அதை ஏற்க மறுத்த நீதிபதி, ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர செந்தில் பாலாஜிக்கு அறிவுறுத்தினார்.
சிறப்பு நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் படி, அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு முறையீடு செய்யப்பட்டது. முறையீட்டை ஏற்க மறுத்த நீதிபதி, மனு தாக்கல் செய்யும் பணிகள் முடிந்ததும் விசாரணைக்கு எடுக்கப்படும் என தெரிவித்தார்.