தமிழ்நாடு: ‘காலாவதியாகப் போவது ஆளுநர்தான்’ - அமைச்சர் பொன்முடி
சென்னை கிண்டியில் உள்ள தொழில்நுட்பக் கல்வி இயக்கத்தில் வரும் கல்வி ஆண்டிற்கான பொறியியல் படிப்பு கலந்தாய்விற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவை உயர்க்கல்வி துறை அமைச்சர் பொன்முடி தொடங்கி வைத்தார்.
இதன் பின்னர், அமைச்சர் பொன்முடி பேசும்போது, ‘ஆளுநர் ஆர்.என்.ரவி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி அல்ல. மத்திய அரசால் தேர்ந்தெடுக்கப்படுபவர். ஆளுநராக இருப்பவர் அரசியல் பேசுவதென்பது தவறான ஒன்று.
மாநில அரசுடன் இணக்கமாக செயல்படுவதுதான் ஆளுநர் கடமை. ஒன்றிய அரசின் பிரதிநிதியாக ஆளுநர் செயல்பட கூடாது. திராவிட மாடல் காலாவதியாகவில்லை. திராவிடம் வந்ததும் சனாதனம் காலாவதியாகிவிட்டது.
இனி, காலாவதியாக போவது ஆளுநர்தான். திராவிடம் அகில இந்திய அளவில் பரவத் தொடங்கி இருக்கிறது. திராவிடம் இந்தியாவுக்கு மட்டுமல்ல உலகத்திற்கே பெருமையான கொள்கை.
சென்னைப் பல்கலைக்கழகத்தின் தரம் 10வது இடத்தில் இருந்து 100வது இடத்திற்கு சென்றதாக ஆளுநர் கூறியது தவறு. தமிழகத்தில் கல்வித்தரம் நன்றாக இருக்கிறது என ஏற்கனவே ஆளுநர் பேசியிருக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.