சீர்காழி அருகே நிச்சயதார்த்தம் முடிந்து கல்யாணத்திற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், மர்ம நபர்களால் புதுமாப்பிள்ளை அடித்துக் கொல்லப்பட்டுள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை சேர்ந்தவர் கனிவண்ணன். கேட்ரிங் படித்து முடித்துள்ள இவர் வெளிநாட்டில் வேலை செய்து வந்துள்ளார். வெளிநாட்டு வேலையில் நாட்டம் இல்லாததால் மீண்டும் சொந்த ஊருக்கே திரும்பி இருக்கிறார். பின் சீர்காழியிலே உள்ள ஒரு பிரபல தனியார் உணவகத்தில் சமையல் கலைஞராக பணிபுரிந்து வந்தார். கனிவண்ணனுக்கு 30 வயது ஆன நிலையில், அவரது வீட்டார் அவருக்கு திருமணம் செய்து வைக்க பெண் பார்த்து வந்தனர். இதையடுத்து சில நாட்களுக்கு முன்பாகதான் இவருக்கு நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இந்நிலையில் புதுமாப்பிள்ளையாய் சந்தோஷத்தில் வலம் வந்த கனிவண்ணன் மர்மநபர்களால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார்.
சம்பவம் நடந்த அன்று இரவு அவர் நண்பர்களுடன் மது அருந்திவிட்டு வீட்டிற்கு திரும்பியுள்ளார். பின் நண்பர்களுடன் கைபேசியில் பேசிக் கொண்டிருந்த கனிவண்ணன் திடீரென பைக்கை எடுத்து விட்டு வெளியே சென்றிருக்கிறார். பின் அவர் காட்டுப்பகுதியில் இறந்து கிடக்கிறார் என்ற மரண செய்திதான் வீட்டுக்கு வந்தது.
சீர்காழியில் உள்ள ஒரு காட்டுப்பகுதியில் ஒருவர் இறந்து கிடப்பதாக அவ்வழியாக வந்த சிலர் காவல்துறைக்கு தகவலளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இரத்த வெள்ளத்தில் இறந்துக் கிடந்த கனிவண்ணனின் உறவினருக்கு தகவலளித்தனர். ஆய்வு செய்ததில் கனிவண்ணன் மர்ம நபர்களால் தலையில் அடித்துக் கொல்லப்பட்டது தெரியவந்துள்ளது.
சம்பவ இடத்தில் திரண்ட கனிவண்ணனின் உறவினர்கள் கூச்சலிட்டு அலறி, போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்தைக் கட்டுக்குள் கொண்டு வந்த போலீசார் கனிவண்ணன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் காவல்துறையினர் கனிவண்ணனின் கைப்பேசியை ஆய்வு செய்ததில் சம்பவத்தன்று இரவு அவர் சில பெண்களுடன் பேசியிருப்பதும் தெரியவந்துள்ளது. இது தகாத உறவால் நடந்த கொலையா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.