தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள நரசிங்கம்பேட்டை பச்சன் அக்ரகாரம் பகுதியைச் சேர்ந்தவர் மகாலிங்கம், இவரது மகன் தனபால் (38). இவர், கொத்தனார் வேலை செய்து வந்தார்.
வேலை முடிந்து வீட்டுக்கு வந்த கொத்தனார் தனபால் அதேப் பகுதியில் உள்ள மெயின் ரோட்டில் நின்று கொண்டிருந்தார். அப்போது 2 மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 3 பேர் திடீரென தனபாலை சுற்றிவளைத்து அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு, மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர்.
இந்த திடீர் தாக்குதலில் படுகாயம் அடைந்த தனபால் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் உடனடியாக மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே தனபால் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த கொலை சம்பவம் முன்விரோதத்தில் நடந்ததா? அல்லது சொத்து பிரச்னை ஏதேனும் உள்ளதா? என பல்வேறு கோணங்களில் திருநீலக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.