டெல்லியில் ரூ.970 கோடியில் புதிதாக கட்டப்பட்டு இருக்கும் நாடாளுமன்ற கட்டடத்தை வருகிற 28ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார். இதுகுறித்து மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, அனுராக் சிங் தாக்கூர், கிஷன் ரெட்டி ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்து பேசினர்.
அப்போது மத்திய அமைச்சர் அமித்ஷா கூறுகையில், ‘புதிய நாடாளுமன்ற கட்டடம் பிரதமர் மோடியின் நீண்ட கால கனவு. புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் தமிழ்நாட்டு ஆதீனங்கள் வழங்கிய சோழர் காலத்து செங்கோல் வைக்கப்படும். பிரதமர் மோடி செங்கோலை பெற்றுக்கொள்வார்’ என்று அறிவித்து இருந்தார்.
புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் வைக்கப்பட உள்ள செங்கோல் மாதிரியை உம்மிடி பங்காரு நகை நிறுவனத்தினர் தயாரித்து உள்ளனர். இதை பிரதமர் மோடியின் கையில் வழங்கும் விதமாக தமிழ்நாட்டில் உள்ள ஆதீனங்கள் குழு விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றது.
இந்த குழுவில் மதுரை ஆதீனம், திருவாடுதுறை ஆதீனம், மயிலாடுதுறை தருமபுர ஆதீனம் உள்பட 12 பேர் சென்றனர். மேலும் செங்கோல் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஆதீனங்களை சேர்ந்த பாரம்பரிய இசை கலைஞர்களும் உடன் சென்றுள்ளனர். முன்னதாக ‘புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் திறப்பு விழாவில் பிரதமர் மோடியை சந்தித்து செங்கோலை பரிசளிப்பேன்’ என, மதுரை ஆதீனம் கூறினார்.