மயிலாடுதுறை உணவகத்தில் கர்ப்பிணிப்பெண் சாப்பிட்ட வடையில் பல்லி இருந்ததாக புகார் எழுந்ததால் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா தில்லையாடியை சேர்ந்தவர் செல்வம். இவர் 8 மாத கர்ப்பிணியான தனது மகள் செல்வலட்சுமியை மருத்துவ பரிசோதனை செய்வதற்காக நேற்று காலை மயிலாடுதுறை திருவிழந்தூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளார். இந்நிலையில் தனது மகள் சாப்பிட வேண்டும் என்று கூறியதால் பூம்புகார் சாலையில் மயிலாடுதுறை வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் எதிரே உள்ள சைவ உணவகத்திற்கு அழைத்து சென்றுள்ளார். அங்கே செல்வலட்சுமி பொங்கல், வடை ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளார்.
வடையை சாப்பிட்டபோது அதில் பல்லி ஒன்று வெந்து கருகி இருந்ததால் அதிர்ச்சி அடைந்துள்ளார். இனி நடந்த சம்பவத்தை செல்வமே விவரிக்க கேட்டோம்.
”இது குறித்து உணவக நிர்வாகத்தினரிடம் கூறினேன். உடனே வேகமாக வந்த கடை நிர்வாகத்தினர் அது கருவேப்பிலைதான். வேறெதுவம் இல்லை என்றபடி எங்கள் இலையில் இருந்த வடையை பறித்து தூக்கி வெளியே எறிந்தனர். இதற்கிடையே என் மகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்படவே மகளை அழைத்துக் கொண்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தேன். அங்கே சிகிச்சை அளிக்கப்பட்டு கர்ப்பிணியான என் மகள் நலமுடன் வீடு திரும்பினார்.
அதிர்ச்சியிலிருந்து மீளாத நான் இச்சம்பவம் குறித்து மயிலாடுதுறை காவல் நிலையம் மற்றும் நகராட்சி உணவு பாதுகாப்புத்துறையினரிடம் புகார் தெரிவித்துள்ளேன்” என்றார் பதற்றம் குறையாதவராக.
செல்வம் கொடுத்த புகார் தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என மயிலாடுதுறை நகராட்சி உணவு பாதுகாப்பு துறை அலுவலர் சீனிவாசனிடம் கேட்டோம். “அந்த உணவகத்திற்கு விளக்கம் கேட்டு பதில் அளிக்க நோட்டீஸ் வழங்கியுள்ளோம். அதற்கான பதில் வந்த பின்னர் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.” என்றார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு மயிலாடுதுறையில் ஒரு உயர்தர சைவ உணவகத்தில் உணவில் கரப்பான் பூச்சி கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பாகியது. தற்போது வடையில் பல்லி கிடந்த சம்பவம் பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. இது போன்ற நிகழ்வுகள் தொடர்வதால் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மயிலாடுதுறையில் உள்ள உணவகங்களில் அதிரடி சோதனை நடத்தி சுகாதாரமற்ற முறையில் செயல்படும் உணவகங்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
-ஆர்.விவேக் ஆனந்தன்