தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது-அண்ணாமலை பேட்டி

சென்னையில் இருக்கக்கூடிய அரசியல்வாதிகளுக்கு தென் தமிழகத்தின் மீது அக்கறை இல்லை.
பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை
பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை

திமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு தலைவிரித்து ஆடுகிறது. கொலை கொள்ளை சம்பவங்கள் தினந்தோறும் அரங்கேறுகிறது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தூத்துக்குடி விமான நிலையத்தில் பேட்டி அளித்தார்.

என் மண் என் மக்கள் பாத யாத்திரையின் இரண்டாம் கட்ட பயணத்தை இன்று தென்காசி மாவட்டம், ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியில் இருந்து தொடங்குகிறார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. சென்னையிலிருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்த அவர், விமான நிலையத்தில் வைத்து செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் கூறியது, "நான்கு நாட்களுக்கு முன்பு திருநெல்வேலி மாநகர மாவட்டத்தின் பாரதிய ஜனதா கட்சியின் இளைஞர் அணி பொதுச் செயலாளர் ஜெகன் பாண்டியன் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் பாஜக கிளை தலைவர் குடும்பத்தோடு வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். இதையெல்லாம் பார்க்கும் போது தமிழ்நாட்டில் சட்டம்- ஒழுங்கு என்று ஒன்று இருக்கிறதா? என்ற கேள்வி தான் எழுகிறது.

தமிழகம் வன்முறை கலாச்சார மையமாக மாறி வருவதை கண்கூடாக பார்க்க முடிகிறது. தமிழகத்தில் கந்துவட்டி கொடுமை, கூலிப்படை தாக்குதல் சம்பவங்களால் அப்பாவி பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எங்கு பார்த்தாலும் லஞ்சம் தலை விரித்து ஆடுகிறது. இதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் திமுக அரசும், முதலமைச்சரும் இருக்கிறார்கள்.

தமிழகத்தில் ஆட்சி செய்யக்கூடிய திமுக கடந்த 30 மாதங்களாக தான் செய்த சாதனைகளை சொல்ல முடியாமல் மணிப்பூரில் கலவரம், மகாராஷ்டிராவில் கலவரம் என்று மக்களை குழப்பி வருகிறது. தமிழகத்தில் உள்ள மாணவர்களுக்காகவும் பெண்களுக்காகவும், கல்விக்கான வளர்ச்சியை திமுக இதுவரை கண்டு கொள்ளவில்லை.

இந்திய வரலாற்றிலேயே பெண் குழந்தைகளுக்கு அனைத்து பள்ளிகளிலும் தனியாக கழிப்பறை இருக்க வேண்டும் என்று பெரும் திட்டத்தை கொண்டு வந்தது பாரதிய ஜனதா கட்சி. திமுக ஆட்சியில் தென் தமிழகம் வளர்ச்சியில் பின் நோக்கி போய்க் கொண்டிருக்கிறது. தென் தமிழகம் ஒரு அபாயகரமான மண்டலமாக காட்சியளித்து வருகிறது.

தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியில் 1 முதல் 2 ட்ரில்லியன் பொருளாதாரம் தென் தமிழகத்தில் உருவாக வேண்டும். ஆனால் அப்படி இல்லாமல் ஜாதி, வன்முறை போன்றவற்றால் முடங்கி கிடக்கிறது.

படித்த இளைஞர்களுக்கு வேலை இல்லை. சென்னையில் இருக்கக்கூடிய அரசியல்வாதிகளுக்கு தென் தமிழகத்தின் மீது அக்கறை இல்லை.

வருங்காலங்களில் தொழில் வளர்ச்சிக்கான ஒப்பந்தங்களை மேற்கொள்ளும்போது அதில் 50 சதவீதம் தென் தமிழகத்தில் வருமாறு அரசு தொலைநோக்கு சிந்தனையோடு ஒப்பந்தங்களை மேற்கொள்ள வேண்டும். தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக உதான் திட்டத்தின் மூலமாக தூத்துக்குடியில் மற்றொரு விமான நிலையம் அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" இவ்வாறு அவர் கூறினார்.

என் மண் என் மக்கள் பாதையாத்திரைக்காக தென்காசி மாவட்டம், ஆலங்குளம் செல்லும் அண்ணாமலை போகிற வழியில் திருநெல்வேலி அரசு மருத்துவமனை வைக்கப்பட்டுள்ள ஜெகன் பாண்டியன் உடலுக்கு அஞ்சலி செலுத்தி அவரது உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com