கும்பகோணம் அருகே கள்ளப் புலியூர் செல்போன் டவர் மீது அரியலூர் மாவட்டம் T. பழூர் பகுதியை சேர்ந்த குமார் என்பவர் தனது கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்து தற்கொலை செய்து கொள்ளப்போவதாக மிரட்டல் விடுத்தார். இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது
அரியலூர் மாவட்டம் T.பழூர் பகுதியைச் சேர்ந்தவர் குமார். இவரது நிலத்தை அதே பகுதியை சேர்ந்த பரமசிவம் என்பவர் போலி பத்திரம் தயார்த்து அபகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக, நடவடிக்கை எடுக்க கோரியும், இதற்கு உடந்தையாக இருந்த திருப்பனந்தாள் முன்னாள் சார்பதிவாளர் மோகன்தாஸ் உள்ளிட்ட வருவாய் துறையினர் மீதும் நடவடிக்கை எடுக்க கோரிகை விடுத்தார்.
மேலும், முதலமைச்சரின் தனி பிரிவு, கும்பகோணம் கோட்டாச்சியர் மற்றும் காவல்துறையினருக்கு புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி, செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை செய்து கொள்ள போவதாக தெரிவித்தார்.
தகவல் அறிந்து, காவல் துறையினரும், தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும், அந்த நபர் கீழே இறங்க மறுத்து விட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.