சீட்டு ஆட்டத்தில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இளைஞரை பட்டப்பகலில் ஓட, ஓட விரட்டி கத்தியால் குத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், இராயக்கோட்டை அருகே உள்ள கெலமங்கலம் துளசி நகரை சேர்ந்தவர் சாமுவேல் (26). அதே பகுதியில் வசித்து வருபவர் ஜெகன் (28). இவர்கள் இருவரும் நண்பர்கள், டிப்பர் லாரி ஓட்டுநர்கள், சீட்டாட்டத்தில் ஈடுபட்டு வந்த இவர்களுக்கு இடையே நேற்று மாலை தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது அங்கு நின்றவர்கள் அவர்களை சமாதானம் செய்து வைத்துள்ளனர்.
இந்த நிலையில், இன்று கெலமங்கலம் ராஜலட்சமி திரையரங்கம் அருகே தனது அக்கா வீட்டுக்கு சென்ற சாமுவேலை, ஜெகன் அவரது கூட்டாளிகள் மூன்று பேர் சேர்ந்து வழிமறித்து தாக்கி உள்ளனர். அப்போது அவர்களிடமிருந்து தப்பித்து ஓடிய சாமுவேலை வயிறு மற்றும் உடலில் கத்தியால் அனைவரும் குத்தியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த சாமுவேலை அப்பகுதி பொதுமக்கள் மீட்டு கெலமங்கலம் ஆரம்ப சுகாதார மையத்தில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு முதலுதவி சசிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அவர் மேல் சிகிச்சைக்காக ஒசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இது குறித்து அறிந்த கெலமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து இந்த கொலை முயற்சி சம்பவம் குறித்து விசாரணை கொண்டு வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சீட்டாட்டம் அரசால் தடை செய்யப்பட்டுள்ள நிலையில்,இந்த பகுதியில் லாட்டரி சீட்டு விற்பனையும், சீட்டாட்டமும் அதிகமாக நடைபெறுகிறது. ஆகையால், காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.