கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் ‘QR CODE’ மூலம் பூக்களின் விபரங்களை அறியும் திட்டத்தைச் சுற்றுலாத்துறை ஏற்பாடு செய்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் முக்கியச் சுற்றுலா இடமாக இருந்து வருகிறது. இங்கு தமிழகம் மட்டுமின்றிப் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இங்குச் சுற்றுலா பயணிகளைக் கவரும் விதமாகப் பல்வேறு இடங்கள் இருந்து வருகிறது. இதில் முக்கியமான இடமாகக் கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா உள்ளது.
இங்குச் சுற்றுலா பயணிகளைக் கவரும் விதமாகப் பல்வேறு வகையிலான பல லட்சம் மலர்கள் பூத்துக்குலுங்கும். தற்போது மே மாத சீசன் ஆரம்பித்து உள்ள நிலையில் மலர் கண்காட்சிக்காகப் பேன்சி , டெல்பினியம், மேரி கோல்ட் , கேலண்டுல்லா உள்ளிட்ட பல்வேறு வகையான மலர்கள் நடவு செய்யப்பட்டு தற்போது பூத்துக்குலுங்கும் நிலையில் இருந்து வருகிறது.
இதில் சுற்றுலா பயணிகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மலர்களின் பெயர்களைக் கண்டறிய ‘QR CODE’ அந்தந்த மலர்களின் பெயர் பலகைகளில் ஒட்டப்பட்டுள்ளது . இதனைச் சுற்றுலாப் பயணிகள் தங்களது கைபேசிகளில் ஸ்கேன் செய்வதன் மூலமாக பூக்களின் விபரங்கள் மற்றும் அதன் குடும்ப வகைகள் எந்தச் சமயங்களில் பூக்கும் என்ற முழு விவரமும் பார்த்துக் கொள்ளலாம் எனத் தயார் செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் சுற்றுலா பயணிகள் எளிதாகப் பூக்களின் பெயர்களைக் கண்டறியலாம் எனவும் இது சுற்றுலா பயணிகளைக் கவரும் என பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.