சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. சனாதனத்தை எதிர்க்க முடியாது, ஒழிக்க தான் முடியும் என்று சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர் உதயநிதி பேசியது தான் இன்று ஹாட் டாப்பிக்காக தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் பரவலாக பேசப்படுகிறது, விமர்சனமும் செய்யப்படுகிறது.
இதையடுத்து அமைச்தர் உதயநிதிக்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. பாஜகவை சேர்ந்த மூத்த தலைவர்கள் உதயநிதி பேசியதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்தியா முழுவதும் பல்வேறு தரப்பினர் உதயநிதி மீது வழக்கு தொடர்ந்துள்ளனர். அவரை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
அதனை தொடர்ந்து உதயநிதி பேசியதற்கு பாஜக நிர்வாகியும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு தனது X தளத்தில் பதிவிட்டுள்ளதாவது, "இஸ்லாமிய பின்னணியில் இருந்த நான் வந்தேன், இருந்தாலும் எனக்கு கோயில் கட்டினார்கல். அதுதான் சனாதன தர்மம். நம்புவது, மரியாதை கொடுப்பது, அன்பு காட்டுவது அனைத்தும் சமம்" என்று இரண்டு நாட்களுக்கு முன்பு பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில் இன்று மீண்டும் சனாதனம் தொடர்பாக குஷ்பு தனது X தளத்தில் பதிவிட்டுள்ளதாவது, "சனாதனத்தை ஒழிக்க விரும்பும் திமுகவினர் மற்றும் அதன் கூட்டணியில் உள்ள கட்சிகள், சனாதனத்தை பின்பற்றுபவர்களின் வாக்குகள் தேவையில்லை என அறிவிக்க முடியுமா என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் முதல்வர் குடும்பத்தினரை இனிமேல் கோயில்களில் பார்க்க முடியாது என விமர்சித்துள்ளார். இதற்கு ஸ்டாலின் முற்றுப்புள்ளி வைப்பாரா" என்று பதிவிட்டுள்ளார்.