தேர்தல் நேரம் வரும் போது மட்டுமே எங்கள் ஞாபகம் உங்களுக்கு வருமா? என கரூரில் ஜோதிமணியிடம் பொதுமக்கள் கேள்வி எழுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
நாட்டின் 77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நேற்று கிராமங்களில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்த கிராம சபை கூட்டத்தில் அரசியல் பிரமுகர் கலந்து கொள்வது வழக்கம். இந்நிலையில், கரூர் பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி, கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மூக்கணாங்குறிச்சி கந்தசாரப்பட்டி பகுதி கிராமத்தில் கிராம சபை கூட்டத்தில் கலந்து கொள்ள முன் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.
இநநிலையில், கிராம சபை கூட்டத்தில் கலந்துக்கொள்ள வந்த ஜோதிமணியை பார்த்த அப்பகுதி மக்கள், தேர்தல் நேரம் வரும் போது மட்டுமே எங்களை உங்களுக்கு ஞாபகம் வருமா? வாக்கு கேட்க மட்டுமே வருகின்றீர்கள், அதன் பின்னர் இந்த பகுதியில் உங்களை பார்க்கவே இல்லை. குறிப்பாக நன்றி சொல்ல கூற கூட வரவில்லை என்று காட்டமாக கேள்வி கேட்க,உடனே எம்.பி. ஜோதிமணி தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதியில் நன்றி தெரிவித்து கொண்டு தான் வந்து கொண்டு உள்ளேன். கரூர் பாராளுமன்ற தொகுதியில் உள்ள கிராமங்களில் நன்றி தெரிவித்து கொண்டு வந்து உள்ளேன். நீங்கள் தேவையில்லாமல் என்னிடம் வாக்குவாதத்தில் ஈடுபட வந்ததுபோல் தெரிகிறது என எம்.பி. ஜோதிமணி ஆவேசமாக பேசினார்.
வாக்கு சேகரிக்க மட்டும் தான் வருகிறீர்கள், ஃபோன் செய்தால் ஒரு முறையாவது எடுத்து உள்ளீர்களா? எம்.பி. என்கின்ற முறையில் நாங்கள் யாரிடம் முறையிடுவது என அடுக்கடுக்காக கேள்வி எழுப்பினார்கள். பதில் சொல்ல முடியாமல் திணறிய ஜோதிமணி அங்கிருந்து வெளியேற தயாரானார். அப்போதும் விடாத பொதுமக்கள் ஜோதிமணியை துரத்தி கொண்டே சென்றனர்.கேள்விகள் கேட்கும் பொதுமக்களை சமாதானப்படுத்த முயற்சிக்காமல் அவர்களுடன் சரிக்கு சரியாக வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஜோதிமணியின் போக்கு பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-கரூர் அரவிந்த்