கர்நாடக மாநிலம் ராம் நகர் மாவட்டம் கனகபுரா அருகே உள்ள சாமுண்டிபுரா பகுதியை சேர்ந்தவர் நாகநாயக்க - கௌரிபாய் தம்பதியினர். இவரது மகள் ரக்சிதா பாய்(16). கனகபுராவில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த மாதவா மகன் உமேஷ் என்கின்ற வாலிபரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், தங்களின் காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரிய வரவே, நல்ல முறையில் படிப்பை முதலில் முடியுங்கள் என பெற்றோர்கள் கண்டித்துள்ளனர். இதனால் பயந்து போன இருவரும் எங்கே செல்வது என்று தெரியாமல் முழித்துள்ளனர். பின்னர் இருவரும் ஒகேனக்கல் செல்ல முடிவெடுத்து, அங்கே சென்றுள்ளனர். ஒகேனக்கலில் தொங்கு பாலம் கீழே காவிரி ஆற்றில் பாறைகளுக்கு இடையே விஷம் குடித்து மயங்கிய நிலையில் இருந்துள்ளனர்.
இதை பார்த்த பரிசல் ஒட்டிகள் இவர்களை மீட்டு பென்னாகரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே உமேஷ் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் மயங்கிய நிலையில் இருந்த ரக்சிதா தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இது குறித்து ஒகேனக்கல் போலீசார் கூறுகையில், "அந்த பொண்ணும், பையனும் காதலிப்பது பெண்ணுடைய பெற்றோருக்கு தெரியவந்துள்ளது. இதனால், பெற்றோர்கள் படிப்பில் கவனம் செலுத்து என்று கண்டித்துள்ளனர். அதனால், இருவரும் வீட்டைவிட்டு வெளியேறியுள்ளனர். இந்நிலையில், பெண்ணின் பெற்றோர் அங்குள்ள காவல் நிலைத்தில் புகார் கொடுத்துள்ளனர்.
இதனால் பயந்து போன இருவரும் ஓகேனக்கல் வந்துள்ளனர். அங்கு தற்கொலை முயற்சியில் விஷம் குடித்துள்ளனர். ஆபத்தான நிலையில் இருந்த இருவரையும் அப்பகுதி மக்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில் உமேஷ் உயிரிழந்துவிட்டார், அவருடன் வந்த பெண் ரக்சிதா மேல் சிகிச்சைக்காக தருமபுரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம்" என்றனர்.