காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி வழிநெடுகிலும் உரிய அனுமதியின்றி 100க்கும் மேற்பட்ட ராட்சத விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டு உள்ளன.
இந்த பகுதி சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ளதால் இந்த வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகளின் கவனம் சிதறி அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நேற்று மாலை திடீரென காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் சுற்றுவட்டார பகுதியில் பலத்த சூறை காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.
அப்போது பலத்த காற்றின் காரணமாக வி.ஆர்.பி.சத்திரம் பகுதியில் சாலையோரம் விதிகளை மீறி அமைக்கப்பட்டிருந்த ராட்சத தனியார் விளம்பர பேனர்கள் கிழிந்து ஆங்காங்கே தொங்கிய நிலையில் காட்சியளித்து வருகிறது.
மேலும், உயர் அழுத்த மின் கம்பிகளில் பேனர்கள் துண்டு துண்டாக கிழிந்து தொங்குவதால் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டு விடுமோ? என்ற அச்சத்தில் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் அந்த பகுதியை கடந்து செல்கின்றனர்.
எனவே உயிர் பலி ஏதாவது ஏற்படும் முன்பாக அப்பகுதியில் உள்ள ராட்சத விளம்பர பேனர்களை அகற்ற அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- சந்திரசேகர், காஞ்சிபுரம்