'பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிடுவேன்'- சீமான் ஆவேச பேச்சு

"பிரதமர் மோடி தமிழ்நாட்டில் எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் அவரை எதிர்த்து நான் போட்டியிடுவேன்" என்று பேசியுள்ளார் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்
சீமான், பிரதமர் மோடி
சீமான், பிரதமர் மோடி

தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினத்தில் உள்ள நாம் தமிழர் கட்சியின் மாநில மாணவர் பாசறை ஒருங்கிணைப்பாளர் அபூபக்கர் சித்தீக், சைனப் அபிபா ஆகியோரது திருமணம் நேற்று நடைபெற்றது. நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், மாநில கொள்கை பரப்புச் செயலாளர் சாட்டை துரைமுருகன் உள்ளிட்ட நாம் தமிழர் கட்சியினர் கலந்து கொண்டனர்.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மணமக்களை வாழ்த்தி பேசினார் அப்போது அவர் கூறியதாவது.

"திருமண மேடையில் அரசியல் பேச வேண்டாம் என்று சொன்னார்கள். நாங்கள் சந்தர்ப்பத்திற்கு பேசுபவர்கள் கிடையாது சத்தியத்தை பேசுபவர்கள். அரசியல் என்பது வாழ்வியல். அது இல்லாமல் எதுவும் கிடையாது. அபூபக்கர் சித்திக் இந்து மதத்தை சார்ந்த பெண்ணை திருமணம் செய்துள்ளார். இதன் மூலம் இங்கு ஒரு மதமாற்றம் நடந்துள்ளது. சீமான் மதமாற்றம் செய்கிறார் என்று இந்துக்கள் கூட சொல்லவில்லை. ஆனால் சில இஸ்லாமியர்கள் சொன்னார்கள்.

திருமண நிகழ்வில் சீமான்
திருமண நிகழ்வில் சீமான்

நேற்று மணப்பெண்ணின் பெயர் வேறு. அவருடைய மதம் வேறு. வழிபாடு வேறு. இன்று அவர் சைனப் அபிபா என்று பெயர் மாற்றம் பெற்று இஸ்லாமிய பெண்ணாக மாறியுள்ளார். நேற்று மணமகள் பெரும்பான்மை சமுதாயமாக இருந்தார். இன்றிலிருந்து அவர் சிறுபான்மை சமுதாயமாக மாறிவிட்டார். சிறுபான்மை என்று சொன்னால் உங்களுக்கு கோபம் வருகிறது அல்லவா. அதுபோல எனக்கு கோபம் வரனுமா இல்லையா?.. அதனால்தான் யாரையாவது சிறுபான்மை என்று சொன்னால் சொன்னவர்களை செருப்பால் அடிப்பேன் என்று சொன்னேன்.

நான் தமிழன். பெரும்பான்மை தேசிய இனத்தின் மகன். மொழி சிறுபான்மை, மத சிறுபான்மை என்று சொல்கிறீர்கள். மதம் மாறக்கூடியது, ஆனால் அந்த பெண்ணை தமிழச்சி என்பதை மாற்ற முடியுமா? அவளின் மொழியும் இனமும் தமிழர் என்பதை மாற்ற முடியுமா? உங்களுக்கு கோபம் வரவில்லை என்றால் பரவாயில்லை. ஆனால், எனக்கு கோபம் வரும். நான் கோபக்கார தலைவனின் மகன். அப்படிதான் இருப்பேன் என் பிள்ளைகளும் அப்படித்தான் இருப்பார்கள்.

பெரியார் சொன்னது போல் நான் பேசுவதில் நல்லது இருந்தால் எடுத்துக் கொள்ளவும். கெட்டது இருந்தால் விட்டு விடுங்கள். 18% ஜிஎஸ்டியில் சிறுபான்மை மக்களுக்கு 10% ஜிஎஸ்டியா? விதிக்கப்பட்டுள்ளது. இதில் என்ன பெரும்பான்மை சிறுபான்மை என்று பேசுவது.

சீமான், பிரதமர் மோடி
சீமான், பிரதமர் மோடி

அரசியல் சாசனத்தில் சிறுபான்மை இன மக்களுக்கு சலுகைகள் மட்டும் தான் கொடுக்கப்பட்டுள்ளது. விடுதலை பெற்ற இந்தியாவின் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் எத்தனை பேர் பிரதமராக இருந்துள்ளார்கள். ஒன்றுக்கும் பயன்படாத ரப்பர் ஸ்டாம்பு பதவியை அப்துல் கலாமிற்கு கொடுத்தார்கள்.

இந்த நிலத்தில் சிறுபான்மையினருக்கு தேவைப்படுவது உரிமை சலுகைகள் அல்ல. இந்த காயல்பட்டினம் திமுகவின் கோட்டை என்றார்கள். அந்த கோட்டையில் ஓட்டையை போட்டு என்னுடைய கோட்டையாக மாற்றக்கூடிய புரட்சியாளன் நான். எல்லாம் மாறும் நீங்கள் எங்கு சென்றாலும் நான் உங்கள் கூட தான் இருப்பேன்.

என்னை எப்போது நம்ப போகிறீர்கள் என்று தெரியவில்லை. ஒரு வேலை மோடி தமிழ்நாட்டில் தேர்தலில் போட்டியிட்டால் எனக்கு ஒரு விடிவு காலம் வரும். ஏனென்றால் நான் அவரை எதிர்த்து போட்டியிடுவேன். உண்மையிலே இவன் சண்டைதான் போடுகிறான் என்று என்னை நம்புவீர்கள்" என ஆவேசமாக பேசினார்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com