'ஐந்து மாதம் படுத்த படுக்கையாகி இறுதி கட்டத்திற்கு வரை சென்றுவிட்டேன். அதற்கு காரணம் என்னிடமிருந்து சில கெட்ட பழக்கங்கள் தான். அதற்கு நான் அடிமையாகி விட்டேன். இப்போது தெளிவாக உள்ளேன்' என கல்லூரி மாணவர்களிடம் ரோபோ சங்கர் உருக்கமான பேச்சினார்.
போதை விழிப்புணர்வு குறித்த நிகழ்ச்சி வளசரவாக்கம் அடுத்த ராமாபுரத்தில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதில், காவல்துறை இணை கமிஷனர் மனோகர், திரைப்பட நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
அப்போது, போதை பழக்கத்தால் ஏற்படும் குற்ற சம்பவங்கள், போதையை ஒழிக்க தமிழக அரசும், போலீசாரும் என்னென்ன முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறித்த காணொளி காட்சியும் மாணவர்கள் மத்தியில் காண்பிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில், ரோபோ சங்கர் மாணவர்கள் மத்தியில் பல்வேறு நடிகர்களின் குரல்களில் பேசி அசத்தினார். கடந்த சில மாதங்களாக மிகுந்த உடல் நலக்குறைவால் இருந்து மீண்டு வந்த ரோபோ சங்கரை மாணவர்கள் கைதட்டி உற்சாகப்படுத்தினார்கள்.
இதனைத் தொடர்ந்து, மாணவர்கள் மத்தியில் பேசிய ரோபோ சங்கர், கடந்த 4 மாதமாக உலக சூப்பர் ஸ்டாராக நான் தான் இருந்தேன் அனைவருக்கும் தெரியும். தெரியாத்தனமாக ஒரு கிளி வளர்த்துட்டேன். அது என்ன கிளின்னு தெரியாம நான் பட்டபாடு பெரும்பாடு.
ஐந்து மாதம் படுத்த படுக்கையாகி சாவின் விளிம்பிற்கு சென்று விட்டேன். அதற்கு காரணம் என்னிடமிருந்து சில கெட்ட பழக்கங்கள். அதற்கு அடிமையாகி விட்டேன். உங்களுக்கு இப்போது நான் முன் உதாரணமாக நான் இருக்கிறேன். தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு எல்லாம் சென்றுவிட்டேன்.
எனவே, மாணவர்கள் எக்காரணம் கொண்டும் போதை பழக்கத்திற்கு அடிமையாகிவிடக்கூடாது. நீங்கள்தான் இந்தியாவின் எதிர்காலத் தூண்கள். எனவே, உங்களது ஆரோக்கியமே நாட்டின் ஆரோக்கியம் என பேசி உருக்கமாக பேசினார்.