கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே குட்டைக்கோடு பகுதியை சேர்ந்தவர் தங்கப்பன் (55). பால் வெட்டும் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி ரெஜினா (47). தம்பதிக்கு ரெஜிதா என்ற மகள் உள்ளார்.
ரெஜிதாவுக்கு திருமணமாகிவிட்ட நிலையில் கணவன், மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் திருமணமாகி சென்ற மகள் ரெஜிதா கர்ப்பமாகி தாய் வீட்டுக்கு பிரசவத்திற்காக வந்துள்ளார்.
இந்நிலையில் கணவன், மனைவி இருவருக்கும் இடையே தகராறு இருந்து வந்துள்ளது. கடந்த சில தினங்களாக இருவரும் தகராறில் ஈடுபட்டு வந்த நிலையில் அக்கம்பக்கத்தினர் அவ்வப்போது வந்து இருவரையும் சமாதானம் செய்து வைத்துச் செல்வது வழக்கமாக இருந்துள்ளது.
இந்நிலையில் நேற்று மாலை ரெஜிதா மருந்து வாங்குவதற்காக வெளியே சென்றுள்ளார். அப்போது வீட்டில் இருந்த தங்கப்பன், அவரது மனைவி ரெஜினாவுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரம் அடைந்த தங்கப்பன் வீட்டில் இருந்த இரும்பு சுத்தியலால் ரெஜினாவின் தலையில் ஓங்கி அடித்துள்ளார். இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த ரெஜினாவை தாக்கி ரத்தக்காயம் ஏற்படுத்தியுள்ளார்.
ரெஜினா மயங்கி, அசைவு இல்லாமல் கிடப்பதை கண்டு பயந்து போன தங்கப்பன் தன், குற்றச்செயலை நினைத்து அஞ்சி தனது வீட்டுக்குள் சென்று, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சிறிது நேரம் கழித்து அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது ரெஜினா உயிருக்கு போராடியபடி ரத்தவெள்ளத்தில் கிடந்தது தெரியவந்தது. அவரை உடனடியாக மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், வீட்டுக்குள் சென்று பார்த்தபோது தங்கப்பன் தூக்கில் சடலமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அருமனை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தங்கப்பனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் குழித்துறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ரெஜினா மேல்சிகிச்சைக்கு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் கண்காணிக்கப்பட்டு வருகிறார்.
இதுகுறித்து அருமனை போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மனைவியை சுத்தியலால் தாக்கிவிட்டு, கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பு:
வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் தற்காலிகமானதுதான். தற்கொலை எதற்கும் தீர்வாகாது. ஒருவேளை உங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ அல்லது தற்கொலை எண்ணம் உருவானாலோ அதில் இருந்து மீண்டும் வர கீழ்க்காணும் எண்களை அழைக்கலாம்.
மாநில உதவி மைய எண்: 104
சினேகா தொண்டு நிறுவனம்:
எண்-11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம், சென்னை - 600 028.
தொலைபேசி எண்: 044 24640050 மற்றும் 044 2464 0060