தினம், தினம் இடிந்து விழும் அரசு பள்ளி கட்டிடம்: பூட்டியே கிடக்கும் கழிவறைகள்

ஓரிரு மாணவிகள் இப்பள்ளியில் சேர்ந்தாலும் கழிவறையை பயன்படுத்த வேண்டும் என்றால் தங்கள் வீடுகளுக்கு சென்று பயன்படுத்திவிட்டு வர வேண்டிய சூழலும் இப்பள்ளியில் நிலவி வருகிறது.
தினம் இடிந்து விழும் பள்ளி கட்டிடம், மூடியே உள்ள கழிவறை
தினம் இடிந்து விழும் பள்ளி கட்டிடம், மூடியே உள்ள கழிவறை

நல்லம்பள்ளி அருகே அரசு பள்ளி கட்டிடம் தினம் தினம் இடிந்து விழுவதாலும், கழிவறைகள் பூட்டி கிடப்பதாலும், இயற்கை உபாதைகளுக்கு கூட ஏரிகள், முட்புதற்கள் மறைவான இடங்களுக்கு மாணவர்கள் செல்லும் அவல நிலை உள்ளது.

தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே உள்ள பாலஜங்கமனஹள்ளி பகுதியில் அரசு தொடக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளி ஒரே வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. இங்கு அரசு தொடக்கப்பள்ளியில் 80 மாணவ மாணவிகளும் உயர்நிலைப் பள்ளியில் 124 மாணவ, மாணவிகளும் பயின்று வருகின்றனர்.

இங்கு சுற்றுவட்டார கிராமப் பகுதிகள் அதிகம் என்பதால் பத்து ஆண்டுகளுக்கு முன்பே இப்பள்ளி உயர்நிலைப் பள்ளியாக மாற்றப்பட்டது. ஆனால் இன்று வரை அவற்றுக்கான கூடுதல் கட்டிடங்களோ போதுமான இடவசதி விளையாட்டு மைதானம் உள்ளிட்டவை அமைக்கப்படவில்லை.

கட்டிடம், வகுப்பறை பற்றாக்குறை, இடப்பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால் இப்பகுதியை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஐந்து கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள மற்ற உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளுக்கு செல்கின்றனர். இதனால் சேர்க்கை விகிதமும் தொடர்ந்து குறைந்து வருகிறது.

மேலும், இப்பள்ளியில் முக்கிய பிரச்னைகளாக பழைய கட்டிடங்களில் இருந்து கான்கிரீட் மேல் தளங்கள் தினம் தினம் இடிந்து விழுந்து வருகின்றது. இதனால் மாணவ, மாணவிகள் அச்சத்துடனே தினம்தோறும் பள்ளிக்கு வருகின்றனர்.

தண்ணீர் வராத குழாய்கள்
தண்ணீர் வராத குழாய்கள்

மேலும், மழைக்காலங்களில் பள்ளி வளாகத்திலேயே மழைநீர் ஒழுகுவதால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். அதைவிட ஒரு படி மேலாக பள்ளியில் மாணவ,மாணவிகளுக்கு கழிவறை வசதியில்லை என்பதுதான் மிகவும் வேதனைக்கு உள்ளான விஷயம்.

மாணவர்களுக்கான கழிவறைகள் கட்டப்பட்டிருந்தாலும், தண்ணீர் வசதி இல்லாததால் பல ஆண்டுகளாக பூட்டப்பட்டு இருக்கின்றன. இதனால் மாணவர்கள் இயற்கை உபாதைகளுக்காக அருகில் உள்ள ஏரிகள், முட்புதர்கள் மற்றும் மறைவான இடங்களுக்கு சாலையை தாண்டி செல்ல வேண்டிய நிலை தான் தினம்தோறும் நடந்தேறி வருகிறது.

குறிப்பாக பெண் பிள்ளைகளுக்கு கழிவறைகள் இல்லாததால் மிகுந்த சிரமம் அடைந்து வருவதன் காரணமாகவே பல பெண்கள் இப்பள்ளியில் சேர்வதை பெற்றோர்கள் தவிர்த்து வருகின்றனர். அவ்வாறு ஓரிரு மாணவிகள் இப்பள்ளியில் சேர்ந்தாலும் கழிவறையை பயன்படுத்த வேண்டும் என்றால் தங்கள் வீடுகளுக்கு சென்று பயன்படுத்திவிட்டு வர வேண்டிய சூழலும் இப்பள்ளியில் நிலவி வருகிறது.

அரசு பள்ளியில் ஆசிரியர்கள் சிறந்த தேர்ச்சி விகிதத்தை கொடுத்தாலும், இதுபோன்ற இன்னல்களால் பலரும் இப்பகுதியில் உள்ள அரசு பள்ளியை தவிர்த்து வருகின்றனர்.

கிராமப்புறங்களில் திறமையான ஆசிரியர்கள் இருந்தாலும் மாணவர்களுக்கான அடிப்படை வசதிகள் கிடைக்காமல் இருப்பதாலே பல மாணவர்கள் இடைநிற்றல் மற்றும் உள்ளூரில் உள்ள பள்ளிகளை தவிர்த்து விட்டு தொலைவில் உள்ள மற்ற பள்ளிகளுக்கு செல்லும் நிலை தொடர்ந்து வருகிறது. இவற்றை தமிழக அரசும் பள்ளி கல்வித்துறையும் கவனத்தில் கொண்டு மாணவர்களுக்கான அடிப்படை வசதிகளை அந்தந்த பள்ளிகளிலேயே ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும்.

மேலும், இப்பள்ளியில் தினம், தினம் இடிந்து விழும் கட்டிடத்தை இடித்து விட்டு புதிய கட்டிடங்கள் கட்டி குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் எனவும் பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.

பொய்கை கோ.கிருஷ்ணா

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com