காட்டுமன்னார்கோவிலில் இடிந்து விழும் நிலையில் அரசு தொடக்கப்பள்ளி கட்டிடம் உள்ளதால் மாணவர்களின் உயிரோடு விளையாடுவதாக பெற்றோர் குற்றம்சாட்டி உள்ளனர்.
கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் பேரூராட்சி உட்பட்ட ஊராட்சி மன்ற கிழக்கு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது.அங்கு 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை 31 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.மேலும் ஒரு ஆசிரியரும், ஒரு தலைமையாசிரியையும் அந்த பள்ளியில் பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில் ஓடுகளால் ஆன கட்டிடம் மிகவும் சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது.பள்ளியின் முன்பகுதியில் உள்ள வராண்டாவில் பல இடங்களில் ஓடுகள் உடைந்து கீழே விழும் நிலையில் உள்ளன.அதேபோல் ஓடுகளை தாங்கி உள்ள மரக்கட்டைகள் அனைத்தும் மிகவும் பழமையாக இருப்பதால் கரையான்கள் அரித்து எந்த நேரத்தில் உடைந்து விழும் அபாய நிலையில் உள்ளன.
பள்ளியின் கதவின் மூலை மற்றும் சுவர் பகுதியை கரையான் முற்றிலும் அரித்துள்ளது. அந்த பள்ளியில் 1 முதல் 5 வகுப்புகள் உள்ள நிலையில் 2 வகுப்பறை கட்டிடங்கள் மட்டுமே உள்ளன. இதனால் ஏற்கனவே இடவசதி குறைபாடு உள்ள நிலையில், மாணவர்கள் மதிய உணவை முன்பகுதியில் உள்ள வராண்டாவில் அமர்ந்தே சாப்பிட்டு வருகின்றனர்.அங்குதான் கட்டிடத்தின் மேற்பகுதி மிகவும் சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது.
110 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த பள்ளி கட்டிடம் மாணவர்களுக்கு பாதுகாப்பற்ற நிலையிலும், எந்த நேரத்திலும் இடிந்து விழும் ஆபத்தான நிலையிலும் இருப்பதால் பள்ளியின் வராண்டா பகுதியை இடித்து அகற்ற வேண்டும் என்று கல்வித்துறை சார்பில் கடந்த 1 ஆண்டு முன்பே வட்டடார வளர்ச்சி அலுவலர், பேரூராட்சி,பள்ளி மேலாண்மை குழுவினருக்கு பெற்றோர்கள், ஆசிரியர்கள் சார்பில் பல முறை கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதன் பின்னர் அதிகாரிகள் சென்று பள்ளி கட்டிடத்தை பார்வையிட்டு, அளவீடு செய்துள்ள போதிலும், இதுவரை பள்ளி கட்டிடத்தின் முன்பகுதியை அகற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
கட்டிடம் இடிந்து விழுந்து ஒரு உயிரிழப்பு ஏற்பட்டால் பள்ளி நிர்வாகமே பொறுப்பு என்றும், மாணவர்களின் உயிரோடு அதிகாரிகள் விளையாடுவதாகவும் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர் குற்றம் சாட்டி உள்ளனர்.
மேலும் சேதமடைந்து காணப்படும் பள்ளி கட்டிடத்தின் முன்பகுதியை உடனடியாக இடித்து அகற்ற வேண்டும். மாணவர்களின் நலன் கருதி பள்ளி வளாகத்திலேயே கூடுதல் வகுப்பறைகள் கட்டித்தர வேண்டும் என்று மாணவர்களின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதைடுத்து காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச்செல்வன் பள்ளியில் நேரில் சென்று ஆய்வு செய்தார்.