தனியார் வாகனங்களில் விதிகளை மீறி அரசு சின்னங்கள் பயன்படுத்துவதற்கு எதிராக எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் தனியார் வாகனங்களில், அரசு வாகனங்களுக்கு குறிப்பிடும் 'G' என ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளதாகவும், 'இந்திய அரசு', 'தமிழ்நாடு அரசு' எனக் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் கூறி, சென்னையைச் சேர்ந்த அரசு மருத்துவர் கிருத்திகா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கை தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், வாகனங்களில் அரசு சின்னங்களை ஒட்டிக்கொண்டு பலர் சாலை விதிமீறல்களில் ஈடுபடுவதாகவும், குற்றங்கள் அதிகரத்து வர அதுவும் காரணமாக உள்ளது என குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
இந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்சய் கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்த போது, தனியார் வாகனங்களில் விதிகளை மீறி அரசு வாகனங்களுக்காக ஒட்டப்பட்டுள்ள இந்த ஸ்டிக்கர்களை அகற்ற அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுதாரர் தரப்பில் கோரப்பட்டது.
ஆனால், விதிமீறல்களுக்கு எதிராக வட்டார போக்குவரத்து அதிகாரி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தான் கோர முடியும் என தலைமை நீதிபதி சுட்டிக்காட்டியதை அடுத்து, மனுவில் கோரிக்கையை திருத்தி தாக்கல் செய்வதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஏற்கனவே இந்த விவகாரம் தொடர்பாக உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன், அரசு வாகனங்கள் இல்லாமல் தனியார் அரசு சின்னங்களை உபயோகப்படுத்தியது தெரியவந்தால், காவல்துறை மற்றும் போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விரிவான உத்தரவு பிறப்பித்துள்ளதாக நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது.
இதையடுத்து, இதுபோன்ற விதிமீறல்களுக்கு எதிராக எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய அரசுத்தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை செப்டம்பர் 20ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.