சென்னை அண்ணாநகர் கிழக்கு விரைவு போக்குவரத்து கழக பணிமனையில் சென்னையில் இருந்து பெங்களூரு மார்க்கமாக செல்லக்கூடிய பேருந்து ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
அப்போது திடீரென அந்த பேருந்து தீப்பிடித்து எரிந்ததால் கரும் புகை சூழ்ந்தது. இதனால் இந்த பகுதி முழுவதுமே ஒரே புகை மண்டலமாக காட்சி அளித்தது. உடனே அங்கு இருந்த ஊழியர்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் எரிந்து கொண்டு இருந்த பேருந்தில் பற்றியிருந்த தீயை அணைக்கும் முயற்சியில் மும்முரமாக ஈடுபட்டனர்.
அதற்குள் பேருந்து முழுவதும் எரிந்து சேதமடைந்தது. இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து ஊழியர்களிடம் அதிகாரிகள் கேட்டறிந்து வருகின்றனர். அரசு போக்குவரத்து பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.