கீழே கிடந்த தங்கக் காப்பை போலீஸாரிடம் பத்திரமாக ஒப்படைத்த இளைஞர்கள்

தஞ்சையில் கீழே கிடந்த 5 சவரன் தங்க நகையை எடுத்து போலீஸாரிடம் ஒப்படைத்த 3 பேரை நகர காவல் துணை கண்காணிப்பாளர் பாராட்டி வெகுமதி வழங்கினார்.
தங்க நகையை போலீஸாரிடம் ஒப்படைத்த 3 பேர்
தங்க நகையை போலீஸாரிடம் ஒப்படைத்த 3 பேர்

தஞ்சையில் உள்ள ஒரு நகை கடையில் பணியாற்றி வரும் கேரளாவை சேர்ந்த அஜ்மல், நவின், ஜஸ்வின் ஆகிய 3 பேரும் கடந்த 31ம் தேதி இரவு பணியை முடித்து விட்டு உணவருந்த பழைய பேருந்து நிலையம் வழியாக சென்றுள்ளனர். அப்போது, சாலையில் தங்க நிறத்தில் காப்பு கிடந்ததை கண்டெடுத்தனர்.

நகைக்கடையில் பணிபுரிவதால் தாங்கள் எடுத்தது தங்கம் என்பதை அறிந்து உடனடியாக தஞ்சை மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.சந்திராவிடம் ஒப்படைத்தனர்.

போலீஸார் தாமரை செல்வனின் நகையை ஒப்படைத்தனர்
போலீஸார் தாமரை செல்வனின் நகையை ஒப்படைத்தனர்

இந்நிலையில் நேற்று தஞ்சை பழைய பேருந்து நிலையத்தில் டிபன் சென்டர் நடத்தி வரும் கரந்தையை சேர்ந்த தாமரை செல்வன் என்பவர், தான் புதிதாக வாங்கிய இரண்டரை லட்சம் ரூபாய் மதிப்பிலான 5 சவரன் தங்க காப்பு தவறி கீழே விழுந்து விட்டது என ரசீதுடன் தஞ்சை மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதற்கிடையில் அந்த 3 பேரும் தாங்கள் கண்டெடுத்து கொடுத்த தங்க காப்பு தாமரை செல்வனுடையது என்பதை காவல் ஆய்வாளர் சந்திரா உறுதி செய்தார். இதனையடுத்து, தஞ்சை பழைய பேருந்து நிலையத்தில் உள்ள காவல் உதவி மையத்தில் தஞ்சை நகர காவல் துணை கண்காணிப்பாளர் ராஜா தங்க காப்பை நகைக்கு சொந்தக்காரரான தாமரை செல்வனிடம் ஒப்படைத்தார்.

3 பேரை பாராட்டி வெகுமதி வழங்கிய காவல்துறை அதிகாரி
3 பேரை பாராட்டி வெகுமதி வழங்கிய காவல்துறை அதிகாரி

அதை தொடர்ந்து அந்த 3 பேரின் நேர்மையை பாராட்டி அவர்களுக்கு சால்வை அணிவித்து கௌரவித்தது மட்டுமல்லாமல் காவல் ஆய்வாளர் சந்திரா 3 பேருக்கு பணம் வெகுமதி வழங்கி பாராட்டினார்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com