தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா அய்யம்பேட்டை ஸ்டேஷன் ரோட்டில் வசித்து வருபவர் முகமது அலி (66) மும்தாஜ் பேகம் (55) தம்பதியினர். இவர்களுக்கு ஐந்து மகள்கள் உள்ளனர். அனைத்து மகள்களையும் திருமணம் செய்து கொடுத்த நிலையில், இரண்டாவது மகள் பர்வீன் பானுவை (27) அய்யம்பேட்டை அரியமங்கையில் வசிக்கும் தமீமுன் அன்சாரி என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளனர்.
பர்வீன்பானு, தமிமுன்அன்சாரி தம்பதியருக்கு திருமணம் ஆகி 9 ஆண்டுகளான நிலையில், முகமது ரஃபி (6) மற்றும் முகமது ரஃப்ஆன் (4) என இரண்டு ஆண் குழந்தைகள் இருந்து வருகின்றனர். இதில் கணவர் தமீமுன்அன்சாரி வாய்பேச முடியாதவர் எனவும், தஞ்சையில் அமைந்துள்ள பிரின்டிங் பிரஸ் கம்பெனியில் கணவர் தமிமுன்அன்சாரி வேலை செய்து வருவதாகவும், இந்நிலையில் பர்வீன் பானு மற்றும் அவரது இரு மகன்களும் திடீரென காணாமல் போனதாக கூறப்படுகிறது.
அதை தொடர்ந்து தனது இரண்டாவது மகள் பர்வீன் பானுவை காணவில்லை என தந்தை முகமது அலி, ஜூலை மாதம் 11ம் தேதி அய்யம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகார் அளித்து ஒரு மாதத்திற்கு மேலாகியுள்ளது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தும், காணாமல் போன தனது மகள் மற்றும் பேரப்பிள்ளைகளை உடனடியாக கண்டுபிடித்து தர வேண்டுமென தமிழக அரசுக்கும், காவல்துறைக்கும் பர்வீன் பானு பெற்றோர் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.