காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அடுத்த காரணித்தாங்கல் பகுதியில் வண்டலூர்- வாலாஜாபாத் நெடுஞ்சாலை ஓரம் உரிய அனுமதியின்றி 30 அடி உயரத்தில் ராட்சத விளம்பர பேனர் அமைக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் நேற்று இரவு காற்றுடன் பெய்த மழையின் காரணமாக ராட்சத விளம்பர பேனர் பாரம் தாங்காமல் அடியோடு பெயர்ந்து காலி நிலத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. சாலையில் விபத்து ஏற்படாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
மேலும் அங்கிருந்த பொதுமக்கள் கிரேன் உதவியோடு பெயர்ந்து விழுந்த ராட்சத பேனரின் மேல் பாகத்தை கழட்டி, அதன் இரும்புத்தூனை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர்.
இதனிடையே வண்டலூர்- வாலாஜாபாத் நெடுஞ்சாலை ஓரங்களில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் ஆங்காங்கே ராட்சத விளம்பர பேனர்கள் அனுமதி இன்றி அமைக்கப்பட்டுள்ளது. இதனால் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகளின் கவனம் சிதறி அடிக்கடி விபத்துகளும் நேரிடுவதாக மக்கள் புகார் கூறுகின்றனர்.
மேலும் மழை காலங்களில் பலத்த காற்று வீசும் போது ராட்சத பேனர்கள் கிழிந்தும், பெயர்ந்து விழும் அபாயம் உள்ளதால் உயிர் சேதம் ஏற்படாத வகையில் துறை சார்ந்த அதிகாரிகள் ராட்சத விளம்பர பேனர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.