பா.ஜ.க. மாநில மகளிர் அணி செயற்குழுக் கூட்டம் இன்று திருச்சியில் நடைபெற்றது. இதில் பா.ஜ.க. மகளிரணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார்.
முன்னதாக செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது, " பிரதமர் மோடி ஆட்சிக் காலத்தில் வருடம் தோறும் ஒரு கோடி ஏழைகளுக்கு இலவச கேஸ் இணைப்பை வழங்கி உள்ளார். தேர்தல் வாக்குறுதியில் கூறியதை பிரதமர் மோடி ஏழை மக்களுக்காக செய்துள்ளார். 200 ரூபாய் கேஸ் விலையை குறைத்து இருப்பது அரசியலுக்காக அல்ல.
தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு கேஸ் சிலிண்டர் விலை ரூபாய் 100 குறைப்பேன் என்று கூறிவிட்டு இதுவரை குறைக்கவில்லை. அவர்கள் மத்திய அரசு கேஸ் விலையை குறைக்க வேண்டும் என்று கூறுவதற்கு தகுதி கிடையாது.
குடும்ப ஆட்சி நடத்துகின்ற, ஊழல் கறை படிந்த அத்தனை பேரும் ஒரே மேடையில் அமர்ந்து, நேர்மையாக திறமையாக ஆட்சி நடத்தக்கூடிய மோடி அவர்களுக்கு எதிராக கூட்டணி அமைத்திருக்கிறார்கள். இந்த கூட்டணியை ஒருபோதும் மக்கள் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. அவர்களுக்கு வெற்றியும் கிடைக்கப் போவதில்லை.
ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது ஒரு விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த கருத்தை மக்கள் முன்பாக வைக்கிறோம். இது குறித்து குழுக்கள் அமைக்கப்பட்டு பல்வேறு கருத்துகளைக் கொண்டு விவாதிக்கப்படும். இதனால் நன்மை என்ன, தீமை என்ன, சாத்திய கூறுகள் உள்ளதா என்பது குறித்து விரிவாக ஆலோசிக்கப்படும். தேர்தல் சீர்திருத்தம் என்பது இந்நாட்டிற்கு மிக அவசியம்
தமிழக முதல்வர் ஸ்டாலின் ஊர் ஊராக சென்று காய்ச்சல் வந்தது போல் பிதற்றிக் கொண்டிருக்கிறார் INDIA கூட்டணியை ஒருபோதும் மக்கள் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. அவர்கள் வெற்றி பெறவும் முடியாது. எத்தனை பேர் சேர்ந்தாலும் ஒன்றும் சாதிக்கவும் முடியாது.
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து அனைவரிடமும் கருத்து கேட்டு மத்திய அரசு முடிவு செய்யும். வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் பிரதமர் மோடி போட்டியிட வேண்டும் என்று நாங்கள் அனைவரும் விரும்புகிறோம். பாஜக கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணைய வாய்ப்புள்ளது" என்றார்.
- ஷானு