காஞ்சிபுரத்தில் காமாட்சி அம்மன் சன்னதி தெருவில் பிரசித்திப்பெற்ற ஏலேல சிங்க விநாயகர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஆண்டு தோறும் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு புதிய ரூபாய் நோட்டுகளால் சன்னதி கருவறை முழுவதும் அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் காட்சியளிக்கும் விநாயகரை பொது மக்கள் வழிபட்டு செல்வது வழக்கம்.
அவ்வகையில் இன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஏலேல சிங்க விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று. வெள்ளி கவசம் அணிவிக்கப்பட்டு தீபாரதனைகள் நடைபெற்று 1 ரூபாய், 2ரூபாய், 5ரூபாய், 10ரூபாய், 20ரூபாய்,50ரூபாய், 100ரூபாய், 200ரூபாய்,500ரூபாய் ஆகிய புதிய ரூபாய் நோட்டுகளால் சன்னதி கருவறை முழுவதும் அலங்கரிக்கப்பட்டு ஏலேல சிங்க விநாயகர் காட்சியளித்தார். அதனையடுத்து ஏராளமான பக்தர்கள் புதிய ரூபாய் நோட்டுகளால் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த விநாயகரை மக்கள் வழிபட்டு சென்றனர். மேலும் வந்திருந்த அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானங்களும் வழங்கப்பட்டது.
மேலும் இந்த விநாயகர் அலங்காரம் குறித்து கோவில் நிர்வாக தலைவர் குப்புசாமி கூறுகையில், "முதல் ஆண்டு ரூபாய் நாணயங்களால் அலங்காரம் செய்தோம். பின் ரூபாய் நோட்டுகளால் கருவறை முழுவதும் அலங்காரம் செய்ய ஆரம்பித்தோம். இந்த ஆண்டு 16ம் ஆண்டில் ரூ.15லட்சம் மதிப்புடைய புதிய ரூபாய் நோட்டுகள் மூலம் அலங்காரம் செய்து பக்தர்களின் வழிபாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்ற வருடமும் இதேபோல ரூ.15லட்சம் மதிப்புடைய புதிய ரூபாய் நோட்டுகள் மூலம் அலங்காரம் செய்திருந்தோம்" என தெரிவித்தார்.