தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி சண்முக சிகாமணி நகரை சேர்ந்தவர் தனலட்சுமி. இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவரது கணவர் உயிரிழந்துவிட்டார். இவர்களது மகன் சரவணகுமார் அங்குள்ள நாடார் மேல்நிலைப் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று இரவு சரவணகுமார் நண்பர்களுடன் எட்டையாபுரம் சாலை பகுதியில் தனது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடினார். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. ரோந்து போலீசார் வந்து அவர்களை கலைந்து போக சொன்னார்கள்.
மறுநாள் சரவணகுமார் தனது வீட்டில் இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த 12 மாணவர்கள் சரவணகுமாரை சரமாரியாக தாக்கி விட்டு தப்பி சென்றுவிட்டனர். சரவணகுமாரின் தாய் தனலட்சுமி உடனடியாக காயம் அடைந்த சரவணகுமாரை கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த கோவில்பட்டி கிழக்கு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.